Corona outbreak Telangana mom makes 1400-km round-trip on scooty to bring her son home
Corona outbreak Telangana mom makes 1400-km round-trip on scooty : தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தின் போதான் நகரை சேர்ந்தவர் ரஜியா பேகம். இந்த லாக்டவுனில், ஆந்திராவில் சிக்கிக் கொண்ட தன்னுடைய மகனை அழைத்து வர 1400 கி.மீ பயணம் செய்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? 48 வயதான ரஜியா பேகம் போதான் மண்டல் பரிஷாத் டெரிடோரியல் காஸ்டியன்ஸி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
Advertisment
இரண்டாவது மகன் முகமது நிஜாமுதீன், நாராயணா மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். தன்னுடைய நண்பரின் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று அவருடன், நெல்லூரில் இருக்கும் ரெஹ்மதாபாத்திற்கு சென்றுள்ளார். மார்ச் 12ம் தேதி நெல்லூருக்கு ரயிலில் சென்ற முகமது தன்னுடைய ரிட்டர்ன் டிக்கட்டை மார்ச் 23ம் தேதிக்கு புக் செய்துள்ளார். ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவரால் தெலுங்கானாவிற்கு திரும்பமுடியவில்லை. சில முயற்சிகள் மேற்கொண்டும் அது தோல்வியில் முடிவடைந்தது. ரஜியா பேகம் தன்னுடைய மகனை வீட்டுக்கு கொண்டு வருவதற்காக இரண்டு முறை போதானின் ஏ.சி.பி. ஜெய்பால் ரெட்டியிடம் இரண்டு முறை ஆலோசனைகளை பெற்றிருக்கிறார்.
கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த பகுதியாக இருப்பதை ஏற்கனவே அறிந்திருக்கிறார் ரஜியா. மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார். அதனால் 5ம் தேதி அன்று யாரிடமும் சொல்லாமல் தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தையும், பெட்ரோல் நிரப்புவதற்கு கேன்’ஐயும், சாப்பிட சப்பாத்தி மற்றும் சப்ஸியுடன் கிளம்பியுள்ளார்.
ஐதராபாத் எனக்கு எப்போது பயம் இல்லை. என்னுடைய கணவரை டையாலசஸிற்காக நான் இரு சக்கர வாகனத்தில் தான் அழைத்து செல்வேன். 25 வருடங்களாக நான் இரு சக்கர வாகனம் ஓட்டி வருகிறேன். 14 வருடத்திற்கு முன்பு என் கணவனை இழந்துவிட்டேன் என்று அவர் கூறுகிறார். ஐதராபாத்தை தாண்டிய பிறகு, தூப்ரான் வந்து தன்னுடைய மகனுக்கு அழைப்பு விடுத்து இவ்வாறாக தான் நெல்லூர் நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
பெட்ரோல் பங்குகளில் 15-20 நிமிடங்கள் பிரேக் எடுத்துக் கொண்டு வண்டி ஓட்டி வந்துள்ளார். ஆந்திரா - தெலுங்கானா எல்லையை அடைந்த போது காவல்துறையினர் அவரை நிறுத்தி விவரம் கேட்க தன்னுடைய கதையை கூறியுள்ளார். அவருடைய பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்று அவருக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளனர் காவல்துறையினர். எல்லையில் இருந்து, மாலை துவங்கி காலை 2 மணி வரை வண்டியில் பயணித்திருக்கிறார் அவர். நெல்லூருக்கு வெளியே இருக்கும் செக்-போஸ்ட்டில், இந்த நேரத்தில் தனியாக செல்ல வேண்டாம். கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு பொழுது புலரும் போது செல்லுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளது ஆந்திரா காவல்துறை. பின்னர் காலை 4 மணி அளவில் நெல்லூரை நோக்கி பயணமானார் ரஜியா.
07:30 மணிக்கு தன்னுடைய மகனை பார்த்துள்ளார். பிறகு 7ம் தேதி அன்று மதியமாக கிளம்பிய அவர்கள், 8ம் தேதி மாலை போதான் திரும்பியுள்ளனர். மிகவும் தைரியமான பெண் தான் அவர். அவரிடம் நான் கார் ஒன்றை வாடகைக்கு வைத்து கொள்ளலாமே என்று கேட்டதிற்கு என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். மேலும் செக் போஸ்ட்டில் நிறுத்தி கேள்வி கேட்டால் பதில் சொல்லும் வகையில் உங்களின் கடிதம் ஒன்றை கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொண்டு சென்றார். அவருடைய தைரியம் தான் அவரின் மகனை மீட்டுள்ளது என்கிறார் போதானின் ஏ.சி.பி. ஜெய்பால் ரெட்டி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil