Cyclone Phethai: பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலத்தில் நேற்று கரையை கடந்தது. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதம்
வங்கக் கடலில் உருவான பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் கரையைக் கடந்தது. கட்ரன்கோனா கிராமத்தின் வழியே புயலின் கண், கரையை கடந்தபோது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. அத்துடன் கனமழையையும் கொட்டித் தீர்த்தது.
கிழக்கு கோதாவரி, குண்டூர், கிருஷ்ணா, விஜயநகரம், விசாகபட்டினம், விஜயவாடா ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்தது. புயல் கரையை கடந்தபோது, கிருஷ்ணா மாவட்டத்தின் கடலோர பகுதிகளில், பலத்த சூறைக்காற்றுடன் பேரலைகள் எழும்பியது.
Cyclone Phethai : பெய்ட்டி புயல் பாதிப்பு
விஜயவாடாவில் பலமணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்ததால், தாழ்வான பகுதிகளை, குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழந்தது. பலத்த காற்றால் ஆங்காங்கே மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காக்கிநாடாவிலும் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து போக்குவரத்து முடங்கியது.. வீடுகளின் மேற்கூரைகள், மரங்கள் பெயர்ந்து விழுந்தன.
கடற்படை கப்பல்களான ஜோதி மற்றும் சக்தி ஹெலிகாப்டர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இந்த 2 கப்பல்களில் நிவாரண பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
more read.. 7 மாவட்டங்களை புரட்டிப் போட்ட புயல்
தலைநகர் அமராவதியில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை மூலம் நிலைமையைக் கண்காணித்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உடனுக்குடன் உத்தரவு பிறப்பித்தார்.
கனமழை பெய்ததால், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 26 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட தானியங்கள் வீணாகியுள்ளன. புயல் காரணமாக விசாகப்பட்டினம், விஜயவாடா நகரங்களில் விமான சேவை முடங்கியது.
தற்போதைய நிலவரம் :
காலை 10 மணி நிலவரப்படி, ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்த புயல், வடக்கு - வடக்கிழக்கு பகுதியை நோக்கி 6 மணி நேரத்தில் கடந்துள்ளது. இந்த புயல் வலுவிழந்து வடமேற்கு நோக்கி நகர்ந்தது.
இதனையடுத்து, ஓடிசாவில் அடுத்த 12 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா இந்தியவானிலை மையம் எச்சரித்துள்ளது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் பகுதியில் புயலின் தாக்கம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரையில் 3 நாட்களுக்கு பிறகு மழை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.