deepika padukone talks about jnu protest what i am seeing today pains me - 'இன்று நான் காண்பது எனக்கு வேதனை அளிக்கிறது' - ஜே.என்.யூ போராட்டத்தில் பங்கேற்ற பிறகு மனம் திறந்த தீபிகா படுகோன்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக் கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் மிகப்பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
Advertisment
இந்நிலையில், கடந்த ஞாயிறு இரவு, முகமூடி அணிந்து ஜே.என்.யூ-வின் சபர்மதி விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தினர். இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜே.என்.யூ-வில் நடந்த தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான கல்லூரிகளிலும் போராட்டம் நடைபெற்றது. தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜே.என்.யூ மாணவர்களே போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
அதில், நேற்று இரவு போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோன், திடீரென ஜே.என்.யூ-வுக்கு வந்து, மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்று இரவு 7:30 மணியளவில் போராட்டத்தில் கலந்து கொண்ட தீபிகா படுகோன், 15 நிமிடங்களுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். நாளை மறுநாள் தீபிகா படுகோன் நடித்த 'சபாக்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதன் மார்க்கெட்டிங் யுக்தியாக தீபிகா போராட்டத்தில் கலந்து கொண்டதாக சிலர் குற்றம்சாட்டினாலும், அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
'சபாக்' படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட் செய்யப்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்டது தொடர்பாக என்டிடிவியிடம் பேசிய தீபிகா, "நாம் பயப்படவில்லை என்று பெருமைப்படுகிறேன். போராட்டத்தால் நம் எண்ணங்களை வெளிப்படுத்த முடியும் என நினைக்கிறேன். போராட்டம் பற்றியும் நாட்டின் எதிர்காலம் பற்றியும் நாம் சிந்திக்கிறோம் என்பது உண்மை என்று நினைக்கிறேன். மாணவர்களுக்காகக் குரல் கொடுக்கவும் தங்களை வெளிப்படுத்தவும், மக்கள் சாலைகளில் இறங்கி நின்று போராடுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில், நாம் மாற்றத்தைக் காண விரும்பினால் இது முக்கியமானதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
அதேசமயம், ஆஜ் தக் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் சொல்ல விரும்பியதை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'பத்மாவத்' படம் வெளியானபோது சொன்னேன். இன்று நான் காண்பது எனக்கு வேதனை அளிக்கிறது. இது இயல்பானதாக மாறாது என்று நம்புகிறேன். யார் வேண்டுமானாலும் எதையும் சொல்ல முடியும், அவர்கள் அதை விட்டு வெளியேறலாம். நான் பயப்படுகிறேன், நானும் சோகமாக உணர்கிறேன். இது நம் நாட்டின் அடித்தளம் அல்ல" என்று தெரிவித்துள்ளார்.