/tamil-ie/media/media_files/uploads/2023/02/Sisodia-in-court.jpeg)
முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மார்ச் 4 வரை சி.பி.ஐ காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் இன்று டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்டார். மணீஷ் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்டபோது ரூஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்திலும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சி.பி.ஐ தரப்பு 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில், மார்ச் 4 ஆம் தேதி வரை சி.பி.ஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்து சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: மணீஷ் சிசோடியாவின் வீட்டிலிருந்து ராஜ்காட் வரை.. கைதாகும் முன் நடந்தது என்ன?
மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். டெல்லியின் தீன் தயாள் உபாத்யாய் மார்க்கில் உள்ள பா.ஜ.க தலைமையகத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தின் போது துணை ராணுவப் படையினருடன் மோதலில் ஈடுபட்ட பல ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர்.
டெல்லியில் தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் வரி தொடர்பான ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைது செய்துள்ளது. விசாரணை அதிகாரிகள் அரசியல் அழுத்தத்தின் கீழ் செயல்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மேலும், “பெரும்பாலான சி.பி.ஐ அதிகாரிகள் மணீஷ் கைதுக்கு எதிராக இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர், அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் அவரைக் கைது செய்வதற்கான அரசியல் அழுத்தம் மிக அதிகமாக இருந்ததால் அவர்கள் தங்கள் அரசியல் எஜமானர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது” என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.