Shubhajit Roy
France backs India, asks G-7 to lift export curbs on vaccine materials : இந்தியாவின் தேவையை கவனத்தில் கொண்டு, ஃப்ரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், ஜி7 நாடுகள் கொரோனா தடுப்பூசி தயாரிப்பிற்கு தேவையான மூலப் பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வேலூர் மலை கிராம மக்களிடம் நகை,பணம் கொள்ளை; சோதனைக்கு சென்ற 3 காவலர்கள் கைது
ஜி7 மாநாடு, வெள்ளிக்கிழமை இங்கிலாந்தில் உள்ள கார்ன்வாலில் துவங்குவதற்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர், சில ஜி7 உறுப்பு நாடுகள், மற்ற நாட்டில் குறிப்பாக மத்திய வருமானம் பெறும் நாடுகளில் தடுப்பூசி உற்பத்தியை பாதிக்கும் வகையில் தடுப்பூசி மூலப்பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. உதாரணத்திற்கு இந்தியாவை நான் கூறுகிறேன். இந்தியாவில் குறிப்பாக, சீரம் நிறுவனத்தின் உற்பத்தி, ஜி7 நாடுகளின் கீழ் இயங்கி வரும் உறுப்பு நாடுகள் விதித்துள்ள ஏற்றுமதி தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார் அவர்.
தற்போது இந்த தடையை நீக்குவது மிகவும் முக்கியமானது. அப்போது தான் இந்தியா அந்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளையும், அந்த நாட்டின் உற்பத்தியை அதிகம் நம்பியிருக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வழங்க முடியும் என்று அவர் கூறினார்.
என்னை பொருத்தவரை, குறைந்த காலத்திற்கு டோஸ்களை நன்கொடையாக அளிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இந்த பாதையை நாம் பின்பற்ற வேண்டும். அடுத்த சில நாட்களில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை பேச நாம் தயாராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு இது மிகவும் நியாயமானதாகவும் செயல்திறன் கொண்டதாகவும் தெரிகிறது. அதை இயக்க மற்றும் பலப்படுத்த, நாம் அனைத்து ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும். இந்த தடைகள் அனைத்தையும் அகற்றுவதை ஜி -7 சாத்தியமாக்க வேண்டும், ”என்றார்.
ஏற்றுமதிக்கான தடையை நீக்க வேண்டும் என்பது இந்தியா அமெரிக்காவிற்கு வைத்துள்ள முக்கியமான கோரிக்கையாகும். அமெரிக்கா, விரைவில் இந்த தடைகளை நீக்கும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது. கோவக்ஸ் வழியாக பிரான்ஸ் இதுவரை 800,000 டோஸ்களை நன்கொடையாக அளித்ததாகவும், 14 ஆப்பிரிக்க நாடுகளுக்கு 1.7 மில்லியன் டோஸ் மாத இறுதிக்குள் அனுப்பப்படும் என்றும் மாக்ரோன் கூறினார்.
மேலும் படிக்க : ஜி-7 மாநாட்டின் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரல் என்ன?
ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து ஜி -7 உச்சி மாநாட்டின் முக்கிய அம்சங்களில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடியை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைத்திருக்கிறார். ஜூன் 12-13 தேதிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மோடி பங்கேற்க உள்ளார்.
மே 11ம் தேதி அன்று, கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் உச்சம் அடைந்த சமயத்தில், மோடி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மோடியின் முடிவை பிரதமர் ஜான்சன் புரிந்துகொண்டுள்ளதாகவும், அவர் பங்கேற்பது தடையின்றி இருப்பதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். எனவே இம்முறை அமர்வுகள் ஹைப்ரிட் மோடில் நடைபெறும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
Building Back Stronger, Building Back Together மற்றும் Building Back Greener என்ற மூன்று அமர்வுகளில் பேச உள்ளார் மோடி. ஜி7 மாநாட்டின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் , சுகாதாரம், டிஜிட்டல் டெக்னாலஜி மற்றும் பொருளாதார முன்னேற்றம் போன்ற விவகாரங்களில் இந்தியா முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டுவருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil