Groom’s father bride’s mother ‘eloped’ Surat appear before police 165477 - சூரத்தில் மாயமான மணமகனின் தந்தை, மணமகளின் தாய் போலீஸ் முன்பு ஆஜர்
சூரத்தில் திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்ட நிலையில், மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் தலைமறைவான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இருவரும் காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளனர்.
Advertisment
குஜராத் மாநிலம் சூரத்தில் முன்னணி தொழிலதிபரின் மகனுக்கும், நவ்சரி பகுதியில் உள்ள வைர வர்த்தகர் ஒருவரின் மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. திருமணம், பிப்ரவரி 13ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. திருமண ஏற்பாடு நிகழ்ச்சிகளில், இருவீட்டாரும் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில், மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் சில நேரங்களில் அன்யோன்யமாக இருந்ததை கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பெரியவர்களிடம் எப்படி இதைப்பற்றி கேட்பது என்று அவர்கள் ஒதுங்கியிருந்த நிலையில், கல்யாண வேலைகளில் பிஸியாகி விட்டனர். கல்யாண பத்திரிகை ஊர் முழுக்க கொடுக்க வேண்டியிருந்ததால், உறவினர்கள் இந்த விசயத்தை அப்போதைக்கு பெரிதுபடுத்தவில்லை. கிட்டத்தட்ட அனைவருக்கும் கல்யாண அழைப்பிதழ் வழங்கப்பட்ட நிலையில, திருமண நிகழ்ச்சிகளில் அனைவரும் ஈடுபட்டிருந்த வேளையில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும், வீட்டை விட்டு ஓடிவிட்டனர். இதன்காரணமாக, மணமக்களின் திருமணம் நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக, நவ்சாரி போலிஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை கண்டு திடுக்கிட்ட போலீசார், விசாரணையை முடுக்கிவிட்டனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும், சிறுவயதிலேயே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் அப்போது கைகூடாததால், பெண், இந்த வைர வர்த்தகரை திருமணம் செய்துள்ளார். இதற்கு காதலரும் துணை புரிந்துள்ளார். தற்போது சந்தித்த இந்த காதல் ஜோடி, அப்போதுதான் சேர முடியவில்லை, இனியாவது நாம் ஒன்றுசேருவோம் என்று நினைத்து தற்போது தலைமறைவாகியதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த ஜோடி சூரத் மற்றும் நவ்சரி காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளது. இதையடுத்து, போலீசார் அவரவர்களின் குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அப்பெண்ணின் கணவர், மனைவியை மீண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். இவரது செயலால் குடும்பத்தின் மரியாதை போய்விட்டது என்றும், மீண்டும் குடும்பத்தில் சேர்ப்பது குறித்து சிந்திக்க அவகாசம் வேண்டும் என்றும் கூறி சென்றுவிட்டார்.
செய்வதறியாது திகைத்த போலீசார், அப்பெண்ணை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
மகளுக்கு திருமணம் செய்து மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்க வேண்டிய தாய், இன்று தவறான செயலால் தனது தாய் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அதேபோல், ஒரு பொறுப்பான பெற்றவனாக மகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்க வேண்டிய தந்தை இன்று அவமானத்தால் வெட்கி தலை குனிந்து நின்று கொண்டிருக்கிறார்.