Advertisment

'ஜெய் ஸ்ரீராம்’ கூறச் சொல்லி கட்டி வைத்து தாக்கப்பட்ட ஜார்கண்ட் இளைஞர் மரணம்...

அன்சாரியை தாக்கிய ஊர் பொதுமக்கள் மீது ஐ.பி.சி. 302 மற்றும் 295 ஏ - வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jharkhand Mob Lynching, Jharkhand Man Tabrez Ansari Assault Case

Jharkhand Mob Lynching

Abhishek Angad

Advertisment

Jharkhand Mob Lynching : ஜூன் மாதம் 18ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் தன்னுடைய நண்பர்கள் இருவருடன் கூட்டாக சேர்ந்து திருடச் சென்றுள்ளார் தப்ரஸ் அன்சாரி. ஓடுகளில் மீது நடக்கும் போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அந்த வீட்டின் உரிமையாளர் கமல் மஹ்தோ கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தினரை எழுப்பியுள்ளார். அன்சாரியின் நண்பர்களோ தப்பித்துவிட, மேலே இருந்து கீழே விழுந்த அன்சாரிக்கு காலில் பலத்த அடி. அருகில் இருக்கும் முட்புதரில் ஒளிந்திருந்த அவரை கண்டுபிடித்த பொதுமக்கள் இளைஞனை போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அவர் கொண்டு வந்திருந்த இருசக்கர வாகனம் (பதிவு செய்யப்படாதது), அவருடைய பர்ஸ், போன் அனைத்தையும் பொதுமக்கள் கைப்பற்றியுள்ளனர்.  பிறகு அவரை சரமாரியாக தாக்கி ஜெய் ஸ்ரீராம் என்றும் ஜெய் ஹனுமான் என்றும் முழங்கச் சொல்லி சித்தரவதை செய்து அதனை படம் பிடித்தும் வைத்துள்ளனர்.

6 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அன்சாரியை கைது செய்து, 9.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது தான் திருடத்தான் சென்றேன் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட அன்சாரி

அவர் மீது ஐபிசி 547, 380, மற்றும் 411ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்பு சனிக்கிழமை காலையில் அன்சாரிக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் சர்தார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிறகு அவர் ஜாம்ஷெட்பூரில் அமைந்திருக்கும் டாட்டா மெய்ன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் வருகின்ற வழியிலேயே உயிர் இழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

சர்தார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஏ.என்.டேய் கூறுகையில் “ஹார்ட் அட்டாக் அல்லது ப்ளாக்கேஜ் மூலமாக இருந்திருக்கலாம்” என்று கூறினார். மேலும் எதுவாக இருந்தாலும் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.

அன்சாரியின் குடும்ப உறுப்பினர்களோ, 4 மணி நேரமாக அன்சாரியை அடித்ததன் விளைவாகவே அவர் உயிரிழந்துவிட்டார் என்று கூறுகின்றனர். அன்சாரியின் மாமா மக்சூத் ஆலம் கூறுகையில், “அவன் மீது இது நாள் வரையில் இப்படி குற்றத்தினை யாருமே சுமத்தியது இல்லை. அவன் திருடி மாட்டிக் கொண்டாலும் சரி, அவனை ஜெய் ஸ்ரீராம் கூற வைத்தது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவன் முஸ்லிமாக இருந்தது தான் தவறு. இல்லையென்றால் அவன் பிழைத்திருப்பான்” என்று வருத்தத்துடன் கூறுகிறார்.

மேலும் எங்களுக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்த போது அவன் உயிருடன் தான் இருக்கிறான் என்றும், அவனுக்கு ஈ.சி.ஜி வழங்கப்பட்டது என்றும் அவர்கள் கூறியதாக ஆலம் கூறுகிறார். ஆனால் அவருடைய கூற்றினை ஏற்க மறுத்துவிட்டார் தலைமை மருத்துவர் டேய்.

துணை காவல் ஆய்வாளர் சாவி ரஞ்சன் கூறுகையில், எங்கள் தரப்பில் இருந்து எங்களுக்கு அழைப்பு வரும் போது அன்சாரி உயிருடன் தான் இருந்தார் என்றும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று தான் கூறினார்கள்.  எங்கு தவறு நடந்திருந்தாலும் சரி நிச்சயமாக அவர்களை தண்டிப்போம் என்றும் சாவி கூறியுள்ளார்.

அன்சாரியை தாக்கிய ஊர் பொதுமக்கள் மீது கொலை மற்றும் தாக்குதலுக்கான தண்டனைப் பிரிவுகளான ஐ.பி.சி. 302 மற்றும் 295ஏவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க : குழந்தை கடத்தல் வதந்தி… தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் 27 பேர் கொலை!

Jharkhand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment