உக்ரைனின் சுமி நகரில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்களின் கடைசி குழுவும் அந்நகரை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
உக்ரைனின் சுமி நகரில் இருந்து அனைத்து மாணவர்களும் வெளியேற்றப்பட்டுவிட்டனர். போல்டாவா நகருக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கிருந்து ரயில்கள் மூலம் உக்ரைனின் மேற்கு பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் அவர்களை தாயகத்துக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த சில நாட்களுக்குள் அண்டை நாடுகளில் இருந்து நமது விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அவர்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.
இதையும் படியுங்கள்: உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள்: மருத்துவராகும் கனவு நிறைவேறுமா?
உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், உக்ரைனில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்கள் மனிதாபிமான வழித் தடங்களைப் பயன்படுத்தி உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இனி இதுபோன்ற ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியாது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கிடைக்கும் வாகனங்களில் ஏறி தப்பி விடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமியில் 600க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்து வந்தனர்.
எங்களை மீட்க யாருமே வராததால் நாங்கள் நடந்தே ரஷ்ய எல்லைக்கு செல்லவுள்ளோம் என்று அவர்கள் வெளியிட்ட வீடியோ பதபதப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் அனைத்து மேற்கொள்ளப்படும் என்று இந்தியத் தூதரகம் உறுதி அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் மற்றும் ரஷ்ய அதிபர் இருவரிடமும் தனித்தனியாக பேசி தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவிக்கச் செய்ததில் முக்கிய பங்காற்றினார்.
இதைத் தொடர்ந்து அவர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 17,100 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
முன்னதாக, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சுமியில் இருந்து மாணவர்களை மீட்பது சவாலாக இருந்தது. கட்டுப்பாட்டு அறை மூலம் இந்தப் பணிகளை நான் கண்காணித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-Written by Anisha Dutta , Shubhajit Roy
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil