மாநிலங்களவையில் மேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் (டிச.11) 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாள், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ஜன 8-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத் தொடரில் முத்தலாக் மசோதா, இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் நிறுவனங்கள் அவசர சட்டதிருத்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன் கூட்டணி கட்சிகளுக்கு வேண்டுகோள் வைத்த பிரதமர் மோடி, "நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் கூட்டத் தொடரை நடத்த ஒத்துழைக்க வேண்டும். ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும்." என்றார்.
இந்த நிலையில், முதல் நாளில் எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
அதிமுக உறுப்பினர்கள் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் அமளி நீடித்தது. இதேபோல் காவிரி டெல்டா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி திமுக உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்கள் எழுப்பியதால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவர்களை அமைதி காக்கும்படி அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார். எனினும் அமளி நீடித்தது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் படிக்க - மேகதாது அணை விவகாரம்: திட்ட அறிக்கை தயாரிப்புக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்