Manohar Parikkar : கோவாவின் மபூசா என்ற நகரில் பிறந்தவர் மனோகர் பாரிக்கர். பள்ளி மற்றும் கல்லூரி காலங்களிலேயே தீவிர ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பின் தொடர்ந்து வந்தவர்.
ஆர்.எஸ்.எஸ்ஸில் Manohar Parikkar
அப்போதைய கோவா ஆர்.எஸ்.எஸ் தலைவராக பணியாற்றிய சுபாஷ் வெளிங்கர் என்பவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த்வர் அவர். வெளிங்கரை தன்னுடைய மூத்த சகோதரன் என்று அழைப்பதையே பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தவர் மனோகர் பாரிக்கர். உலோகவியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். உலகப் புகழ் பெற்ற ஐஐடி பாம்பாயில் இவர் தன்னுடைய பொறியியல் படிப்பை முடித்தார்.
அரசியல் களம்
முதன்முறையாக பாஜக சார்பில் வடக்கு கோவா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். 1991ம் ஆண்டு 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் ஹரிஷ் ஜாந்த்யேவிடம் தோல்வியை தழுவியவர். 1994ல், மூன்று வருடங்களுக்குப் பிறகு பஞ்சிம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டசபையில் அன்று பாஜக வெறும் 4 தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றது.
1999ல் குறுகிய காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் இடம் பிடித்தார் மனோகர் பாரிக்கர். 2000ம் ஆண்டில் அன்றைய முதல்வராக இருந்த ஃபிரான்சிஸ்கோ சர்தின்ஹாவிற்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று அக்டோபர் 2000-ம் ஆண்டில் முதல் முறையாக, 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் முதல்வரானார் மனோகர் பாரிக்கர்.
முதல்வராக பதவியேற்ற ஒரு மாதத்திலேயே தன்னுடைய மனைவியை இழந்துவிட்டார். அதன் பின்பு தன்னுடைய இரண்டு மகன்களுடன் வாழ்நாளை கழித்து வந்தார். அக்டோபர் 2000 - பிப்ரவரி 2002 , ஜூன் 2002, டிசம்பர் 2012, மார்ச் 2017 என நான்கு முறை கோவாவின் முதல்வராக பொறுப்பில் இருந்தவர் மனோகர் பாரிக்கர். தன்னுடைய 63 வயதில் தன்னுடைய மகன் உட்பால் இல்லத்தில் மரணமடைந்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார் மனோகர் பாரிக்கர். மும்பை லலிதாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்பு மூன்று மாதங்கள் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் மருத்துவ சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் தன்னுடைய மகன் இல்லத்தில் இன்று மாலை 07:30 மணிக்கு உயிரிழந்தார் மனோகர் பாரிக்கர். எளிமையான தோற்றம், யாரையும் கவரும் கனிவான பேச்சுக்கு சொந்தக் காரர் என்பதால் தான் கட்சிப் பாகுபாடுகள் ஏதுமின்றி அவரின் மறைவிற்கு அனைத்துக் கட்சியினரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : தலைவர்களின் இரங்கல் செய்திகள்