ரம்லான் புனித நாளுக்கு ஒரு நாள் முன்பு, காஷ்மீரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிக்கையின் ஆசிரியர் சுஜாத் புகாரியை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றார்கள். இதனால் காஷ்மீர் பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இக்கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றது காஷ்மீர் காவல்துறை.
யாரிந்த சுஜாத் புகாரி என்பதை அறிய
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் ஐஜி. பானி பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, புகாரியை கொல்வதற்கான திட்டங்கள் அனைத்தும் பாகிஸ்தானில் போடப்பட்டது என்றும் அதை நிரூபிப்பதற்கான வலுவான ஆதரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறியிருக்கின்றார். மேலும் இக்கொலையில் சம்பந்தப்பட்ட நான்கு நபர்களின் பெயர்களையும் வெளியிட்டார் பானி.
ஸ்ரீநகரைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தினர் சஜ்ஜத் குல், அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த அஜாத் அஹ்மத் மாலிக், முசாபர் அஹ்மத் பாத், மற்றும் நவீத் ஜாட் ஆகியோர் பெயர்களை வெளியிட்டார். இதில் தற்போது சஜ்ஜத் குல் பாகிஸ்தானில் இருப்பதாகவும், நவீத் ஜாட் தெற்கு காஷ்மீரில் நடமாடுவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த கொலைக்கான முகாந்திரம் பற்றி போலீஸ் எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 14ம் தேதி தன்னுடைய பாதுகாவலர்களுடன் இஃப்தார் நோன்பினை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தில் வந்து இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கின்றார்கள். அது தொடர்பான சிசிடிவி கேமரா பதிவினை வெளியிட்டிருந்தது காவல் துறை.