உபவாசம் இருப்பது நம்முடைய நம்பிக்கையாக இருக்கிறது. நாம் உபவாசம் இருந்து மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஏப்ரல் 19) கவர்னர் மாளிகையில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசினார்.
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் இசுலாமியர்களை கௌரவிக்கும் விதமாக இன்று மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், முதலமைச்சர் ந.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் R. செல்வம், அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர் P. ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள், வக்பு வாரிய உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்: 23-ம் தேதி வரை தமிழகம், புதுவையில் கடும் வெயில்: 10- 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை
இசுலாமிய மதகுரு “இமாம்“, புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த குருமார்கள், தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொழுகை மேற்கொண்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றுப் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், விரதம் மேற்கொள்வது இறை நெறிக்கு மட்டுமல்ல உடல் நலத்திற்கும் உகந்தது. உபவாசம் இருப்பது நம்முடைய நம்பிக்கையாக இருக்கிறது. நாம் உபவாசம் இருந்து மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் பசியோடு இருக்கும்போது தான் மற்றவர்கள் பசியை அறிந்து உதவி செய்ய முடியும். சகோதரத்துவத்தோடு நாம் அனைவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், என்று கூறினார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.