Rafale Controversy hits Rafel Village : ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்காக ஒப்பந்தங்கள் போடப்பட்ட நாளில் இருந்து நாளொரு பொழுதும் பிரச்சனை தான். வதந்திகள், குழப்பங்கள், ஊழல் நடந்ததா நடக்கவில்லையா என தினம் ஒரு டிபேட் ஷோ.
உச்ச நீதிமன்றம் ஒன்று சொல்லும், உடனே அதற்கு தேசிய கட்சிகள் பாஜகவிற்கு ஆதரவாகவும், சிலர் காங்கிரஸிற்கு ஆதரவாகவும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு ஒரு மாதத்திற்கான பாடுபொருளாகவே மாற்றிவிடுவார்கள் ரஃபேல் விவகாரத்தை. இதற்கும் கிராமத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றீர்களா ?
Rafale Controversy hits Rafel Village
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மஹாசமுந்த் என்ற தொகுதியில் தான் அமைந்திருக்கிறது ரஃபெல் (Rafel) என்ற கிராமம். 200 குடும்பங்களுடன் இருக்கும் இந்த குட்டி கிராமம் இது. ரஃபேல் பேர ஒப்பந்தம் தொடர்பாக அடிக்கடி செய்திகளும், செய்தித்தாள் பிரசுரங்களும் வெளியாகி வர, அக்கம் பக்கம் கிராமங்களில் வசிக்கும் மக்கள் இந்த கிராமத்தினை நையாண்டி செய்து வருகின்றனர்.
பெயரினால் பிரச்சனையை சந்திக்கும் ரஃபெல் கிராமம்
கேலியும் கூத்துமாக இந்த கிராமத்தின் பெயர் இருக்கின்ற காரணத்தால் இதை மாற்றியே தீர வேண்டும் என்ற முடிவிற்கே வந்துவிட்டனர் ரஃபெல் கிராம வாசிகள்.
"இந்த ஊருக்கு ஏன் இந்த பேரு வந்துச்சுன்னு எல்லாம் தெரியாதுங்க... ஆனா ரொம்ப வருஷமா இருக்குது. ஆனா சத்தீஸ்கர் உருவாகுறதுக்கு முன்னாடி இருந்தே இந்த ஊருக்கு இது தான் பேரு... நெறைய அரசியல்வாதிங்க இந்த சுத்துவட்டாரத்துல இருக்குற கிராமங்கள தத்தெடுத்துக்கிட்டாங்க... ஆனா ரஃபெல்ல கண்டுக்க ஒருத்தரும் கெடையாது.
இதுல அடிக்கடி இந்த பேரு டிவி, நியூஸ் பேப்பர்ன்னு வர்றதால ஒரே சங்கடம்... நாங்க இத்தனைக்கும் முதலமைச்சர் அலுவலகத்துலையும் இந்த பேர மாத்த சொல்லி கோரிக்கை மனு கொடுத்துருக்குறோம். ஆனா அன்னிக்கி முதலமைச்சர பாக்க முடியல” என்று கூறுகிறார் அந்த கிராமத்தின் மூத்த மனிதர் 83 வயது மிக்க தரம் சிங்.
இங்கு தண்ணீர் பிரச்சனை பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. மேலும் மழை பெய்யாமல் போனால் தண்ணீருக்கு அதிகளவு தட்டுப்பாடு ஏற்படுகிறது. அக்கம் பக்கம் கிராமத்தினரை தவிர எங்கள் ஊர் இருப்பதை யாருமே அறிந்திருக்கவில்லை.
அரசியல்வாதிகள் எங்கள் கிராமத்திற்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுப்பதில்லை. மேலும் இம்முறை யார் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் சரி, எங்களின் ஊர் பெயரை மாற்றுவதைத் தான் முதல் கோரிக்கையாக வைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : ஒரு எழுத்தில் உலகப் புகழை தவறவிட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் !