மலன்கரா சிரியன் ஆர்த்தோடக்ஸ் திருச்சபையின் கீழ் பல்வேறு தேவாலயங்கள் கேரளம் முழுவதும் இயங்கி வருகின்றன. கடந்த சில மாதங்களாக இந்த தேவாலயங்களில் வேலை செய்யும் பாதிரியார்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகிறது.
மிக சமீபத்தில் இத்திருச்சபையின் கீழ் இயங்கும் தேவாலயங்களைச் சேர்ந்த ஐந்து பாதிரியார்கள் ஒரு பெண்ணை பலவருடங்களாக பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கியதாக புகார் அளிக்கப்பட்டு அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள்.
இந்நிலையில் ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் காயம்குளம் பகுதியைச் சேர்ந்த மணமான பெண் ஒருவர் அங்கிருக்கும் தேவாலய பாதிரியார் மீது பாலியல் குற்றச்சாட்டினை வைத்திருக்கிறார்.
பினு ஜார்ஜ் எனப்படும் அந்த பாதிரியார் மாவேலிக்கரா பகுதியில் இருக்கும் சர்ச் ஒன்றில் பணியாற்றி வந்தார். 2014ஆம் ஆண்டு, குடும்ப பிரச்சனை ஒன்றினை தீர்த்துவைப்பதாக கூறி அப்பெண்ணை அழைத்து, தேவாலய அலுவலகத்தில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்று காவல் துறை கூறுகிறது.
"இது தொடர்பாக அப்பெண் தேவாலய நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கிறார். அதனால், பினுவை வேறொரு மாவட்டத்திற்கு இடம் மாற்றினார்கள். ஆனால், அங்கு சென்றும் கூட, அப்பெண்ணிற்கு தவறான முறையில் குறுஞ்செய்தி அனுப்புவது மற்றும் அப்பெண்ணைப் பற்றி வந்ததிகளைப் பரப்புவது என்று பிரச்சனை கொடுத்துள்ளார்" என்றும் காவல் துறை கூறியுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் 378ன் படி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேடிவருகிறார்கள் காவல் துறையினர். குற்றம் சாட்டப்பட்ட பினு எங்கு இருக்கிறார் என்பதைப் பற்றிய சரியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை.