TASMAC: தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதையடுத்து, நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகள் தமிழகத்தில் கடந்த 7ம் தேதி, திறக்கப்பட்டது. மதுக்கடைகளில் நீதிமன்ற நிபந்தனைகள் பின்பற்றப்படாததால், அவற்றை மூடும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொரோனாவுக்கு பயந்தா திருவிழா கொண்டாட முடியுமா பாஸ்? ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய கர்நாடகா!
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மதிமுக, பாமக, மக்கள் நீதி மய்யம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், எஸ்.கே. கவுல், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இதையடுத்து மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தனர். இதன்மூலம் டாஸ்மாக் கடை திறப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியிருக்கிறது.
போர்டிங் பாஸ் நடைமுறையில் மாற்றம், உள்நாட்டு விமான சேவைகள் எப்போது?
இது தொடர்பான மற்றொரு மனு சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்சும் விசாரித்து வருகிறது. இந்த மனுவில் இன்றைய விசாரணையில் உச்சநீதிமன்ற தடை குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பது உகந்தது அல்ல என்று நீதிபதிகள் எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் வழக்கை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
இது போல் கவுதம்சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவில்; கொரோனா தொற்று இருப்பதால் மதுக்கடைகளில் சமூக விலகலை யாரும் கடைப்பிடிக்கவில்லை . இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்; இந்த மனு விசாரணைக்கு ஏற்றது அல்ல. இது தொடர்பாக அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும். இது பொதுநல வழக்கு அல்ல. இந்த மனுவை தாக்கல் செய்த நபருக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிப்பதுடன், இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.