வெள்ள நிவாரண நிதி : கேரளாவில் நீடித்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துவிட்டது. வரலாறு காணாத அளவு பெய்த மழையின் விளைவால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகிறார்கள் கேரள சகோதர சகோதரிகள்.
அவர்களுக்கு மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசுகள் மற்றும் பல அரசு அதிகாரிகள் தங்களால் இயன்ற அளவு உதவியை அம்மாநிலத்தினருக்கு செய்து வருகிறார்கள்.
கேரளாவிற்கு தேவைப்படும் வெள்ள நிவாரண நிதி எவ்வளவு?
இதுவரை சுமார் 19,512 கோடி ரூபாய் வரை அளவில் வெள்ள சேதாரம் ஏற்பட்டுள்ளதாக பினராயி விஜயன் கூறியுள்ளார். பினராயி விஜயன் 1 லட்ச ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதியில் கொடுத்திருக்கிறார்.
ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர கால நிதி உதவியாக 100 கோடி அளித்து உத்தரவிட்டார். நேற்று (19/08/2018) நரேந்திர மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 10 கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்தார். மேலும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை நிதி உதவியாக அளித்துள்ளனர்.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் 10 கோடி ரூபாயும், ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் 5 கோடி ரூபாயும் நிதி உதவி அளித்துள்ளனர். மேலும் நவீன் பட்நாயக் 245 படகுகள் கொடுத்து உதவியுள்ளார்.
To Read this article in English
தமிழகம் 10 கோடி ரூபாயும், புதுச்சேரி 1 கோடி ரூபாயும் ஆந்திர மாநிலம் 10 கோடி ரூபாயும், மஹாராஷ்ட்ரா மாநிலம் 20 கோடியும், குஜராத் 10 கோடியும், பஞ்சாப் மாநிலம் 10 கோடி ரூபாயும் தெலுங்கானா 25 கோடி ரூபாயும் பிஹார் 10 கோடியும் ஹிமாச்சல் பிரதேசம் 5 கோடி ரூபாயும், உத்தரகாண்ட் மாநிலம் 5 கோடி ரூபாயும் சத்தீஸ்கர் 3 கோடி ரூபாயும் மத்தியப் பிரதேசம் 10 கோடி ரூபாயும், கர்நாடகா 10 கோடி ரூபாயும் கொடுத்து நிதி உதவி அளித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியினர் இந்த வெள்ளத்தினை தேசிய பேரிடராக அறிவிக்கக் கூறியுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை நிதி உதவியாக அளித்துள்ளார். தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களுடைய ஒரு நாள் சம்பளத்தினை நிதி உதவியாக அளித்துள்ளார்கள்.
கேரளாவிற்கு எப்படி நிவாரணப் பொருட்கள் அளித்து எப்படி உதவுவது ?
வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்களால் இயன்ற அளவு உதவி செய்து வருகிறார்கள். எம்.ஏ. யூசப் அலி என்னும் தொழில் அதிபர் 5 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். கேரளாவில் ட்ரோல் செய்யப்பட்ட மீன் விற்கும் கல்லூரி மாணவி ஹனான் 1.5 லட்சம் ரூபாயை நிதி உதவியாக அளித்துள்ளார். திமுக கட்சி 1 கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளது. பாஜக எம்.பி வருண் காந்தி 2 லட்சம் ரூபாயினை முதல்வர் வெள்ள நிவாரண நிதியின் கீழ் கொடுத்துள்ளார்.
திரைத்துறையினர் அளித்த வெள்ள நிவாரண நிதி
கமலஹாசன், சூர்யா, மற்றும் விஜய் சேதுபதி போன்றோர்கள் தலா 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளனர். தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் தலா 15 லட்சம் ரூபாயும், சிவகார்த்திகேயன் மற்றும் விஷால் தலா 10 லட்சம் ரூபாயும் நிதி உதவி அளித்துள்ளனர்.
அனுப்பமா பரமேஸ்வரன் ஒரு லட்ச ரூபாயும், நடிகை ரோஹினி 2 லட்சம் ரூபாயும் கொடுத்துள்ளனர். தெலுங்கு நடிகர்களான பிரபாஸ், விஜய் தேவரகொண்டா மற்றும் அல்லு அர்ஜூன் போன்றோர்கள் நிவாரணப் பொருட்கள் அனுப்பி உள்ளனர். இயக்குநர் சங்கர் ரூபாய் 10 லட்சம் கொடுத்துள்ளார்.
கேரள நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பும் நிதி உதவி அளித்துள்ளது. நடிகர் மம்முட்டி மற்றும் அவருடைய மகன் துல்கர் சல்மான் தலா 15 லட்சம் மற்றும் 10 லட்சம் கொடுத்துள்ளனர். மோகன்லால் 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார்.
ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி நிறுவனம் 2 கோடி ரூபாய், சன் நெட்வொர்க் 1 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளன. ஏசியாநெட் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுடன் சேர்ந்து ரூபாய் 25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது.
இந்திய ஸ்டேட் பேங்க் 2 கோடி ரூபாய் நிதி உதவி அளித்ததோடு வெள்ளத்தில் இருந்து மீண்டு வருவதற்காக வாங்கப்படும் வங்கிக் கடன், மாற்று பாஸ்புக், ஏடிஎம் கார்டுகள், செக்புக்குகள் வழங்குவதை துரிதப்படுத்தி உள்ளது.