scorecardresearch

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கு; பினராயி விஜயன் அரசுக்கு புது சிக்கல்

2018 வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கான கோரிக்கையை தீவிரப்படுத்திய காங்கிரஸ்; கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கட்சி உறுப்பினர் ஆகாஷ் தில்லங்கேரியின் ‘வெளிப்பாடுகளை’ நிராகரித்த சி.பி.ஐ(எம்)

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கு; பினராயி விஜயன் அரசுக்கு புது சிக்கல்
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி எஸ்.பி ஷுஹைப் மற்றும் முக்கிய குற்றவாளி ஆகாஷ் தில்லங்கேரி (கோப்பு படம்)

Shaju Philip

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி எஸ்.பி. ஷுஹைப் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கேரளாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது. அதன் முக்கிய குற்றவாளியான ஆகாஷ் தில்லங்கேரி என்ற எம்.வி. ஆகாஷ், சில ஆளும் கட்சியான சி.பி.ஐ(எம்) தலைவர்களின் உத்தரவின் பேரில் தான் இந்த கொலையை செய்ததாக வெளிப்படையாகக் கூறினார். ஆனால் குற்றச்சாட்டுகள் பின்னர் சி.பி.ஐ(எம்) கட்சியால் மறுக்கப்பட்டது.

2018 பிப்ரவரியில் கண்ணூரில் குற்றம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு ஷுஹைப் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் சி.பி.ஐ(எம்) உறுப்பினரான ஆகாஷ் தில்லங்கேரி கட்சியால் நீக்கப்பட்டார். பினராயி விஜயன் தலைமையிலான எல்.டி.எஃப் அரசாங்கத்திற்கு இப்போது கடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது, எதுவெனில் ஒரு சமூக ஊடகப் பதிவின் மூலம் ஆகாஷ் தில்லங்கேரி வெளியிட்ட “வெளிப்பாடு”.

இதையும் படியுங்கள்: ‘காரியக் கமிட்டி உறுப்பினர் தேர்தலுக்கு எந்த அறிகுறியும் இல்லை’: புலம்பும் காங்கிரஸ் தலைவர்கள்

ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் கொலை உட்பட பல கிரிமினல் வழக்குகளில் ஆகாஷ் தில்லங்கேரி தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

புதன்கிழமை, ஆகாஷ் தில்லங்கேரி, முகநூல் பதிவில், “மட்டனூரில் (கண்ணூரில் ஷுஹைப் படுகொலை செய்யப்பட்ட) கட்சித் தலைவர்கள் எங்களை இதைச் செய்ய வைத்தனர். (ஒரு குற்றத்தை நிறைவேற்ற) பல அழைப்புகள் இருக்கும். ஆனால் ஒரு வழக்கு வரும் போது யாரும் உதவ மாட்டார்கள். வழிகாட்டுதல்களை (குற்றம் செய்ய) வழங்கியவர்களுக்கு கூட்டுறவுத் துறையில் வேலை கிடைத்துள்ளது. ஆனால் அத்தகைய கட்டளைகளை நிறைவேற்றியவர்கள் வறுமையையும் கட்சியிலிருந்து புறக்கணிப்பையும் எதிர்கொள்கிறார்கள்,” என்று எழுதியிருந்தார்.

சமூக ஊடகங்களில் சி.பி.ஐ(எம்)-ஐ குறிவைப்பதில் பெயர் பெற்ற ஆகாஷ் தில்லங்கேரி, சி.பி.ஐ(எம்)-ல் இருந்து விலகிய பின்னர் தங்க கடத்தல் மோசடியில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தனது பதிவில் கூறியிருந்தார். “நாங்கள் தவறிழைப்பதைத் தடுக்கவோ அல்லது அவற்றைத் திருத்தவோ கட்சி ஒருபோதும் தலையிடவில்லை. பாதுகாப்பு இல்லாத போது பல வழிகளில் பயணிக்க வேண்டி வரும். வெளியில் பேசினால் பலர் வெளியே வர முடியாது. நாங்கள் சுபாரி கும்பல் (ஒப்பந்த கொலையாளிகள்) என முத்திரை குத்தப்பட்டோம்,” என்று ஆகாஷ் தில்லங்கேரி கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், சி.பி.ஐ(எம்) கட்சி ஆகாஷ் தில்லங்கேரியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. இதுகுறித்து அக்கட்சியின் கண்ணூர் மாவட்ட செயலாளர் எம்.வி.ஜெயராஜன் கூறும்போது, ​​“கொலை வழக்கில் சுபாரி கும்பல் தலைவன் (ஆகாஷ் தில்லங்கேரி) தனது பங்கை மறைக்க விரும்பி, வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க முயன்றார். இவர் தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் கட்சித் தலைவர்களை சிக்க வைக்கும் வகையில் அவரது வெளிப்பாடு உள்ளது. கட்சியையும் அதன் பேனரையும் பயன்படுத்தி யாரும் வழக்கில் இருந்து தப்பிக்க அனுமதிக்க முடியாது. சி.பி.ஐ(எம்) கட்சியில் இந்த சுபாரி கும்பலுக்கு எந்த பங்கும் இல்லை,” என்று கூறினார்.

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பினராயி விஜயன் அரசு எதிர்த்துள்ளது, அதே நேரத்தில் சி.பி.ஐ(எம்) கட்சிக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையிலும், சி.பி.ஐ விசாரணையை எதிர்த்துள்ளது. ஷுஹைப் கொலை குறித்து சி.பி.ஐ விசாரணை கோரி அவரது குடும்பத்தினர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, ​​அந்த மனுவுக்கு எதிராக வாதாட மூத்த வழக்கறிஞர்களை அரசு நியமித்தது. தனி உயர்நீதிமன்ற பெஞ்ச் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது, ஆனால் டிவிஷன் பெஞ்ச் பின்னர் தடை விதித்தது. இதையடுத்து ஷுஹைப் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

பினராயி விஜயன் ஆட்சியின் மீதான காங்கிரஸின் தாக்குதலை தீவிரப்படுத்திய கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே சுதாகரன், ஷுஹைப் கொலையில் சி.பி.ஐ விசாரணையை எதிர்க்கும் சி.பி.ஐ(எம்) முயற்சி, வழக்கில் அதன் “உடந்தையை” வெளிப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார். “ஷூஹைப் சி.பி.ஐ(எம்) ஆல் படுகொலை செய்யப்பட்டார். கொலையின் பின்னணியில் உள்ள உண்மைகளை ஆகாஷ் தில்லங்கேரி வெளிப்படுத்தியுள்ளார். சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக வாதாட உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களுக்கு மாநில அரசு 1.36 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் அம்பலமானது சி.பி.ஐ விசாரணைக்கான எங்களின் கோரிக்கையை உறுதிப்படுத்துகிறது. உச்சநீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடும் என்று காங்கிரஸ் நம்புகிறது,” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Youth congress leader shuhaib murder akash thillenkery