இஸ்ரேல் - காசா இடையே நீண்ட காலமாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ்அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 250 பேரை பணய கைதிகளாக கடத்திச் சென்றனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Israel government approves ceasefire and hostage deal for Gaza, set to take effect on Sunday
இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களுக்கு மேலாக நடைபெறும் இந்த போரில் இதுவரை சுமார் 46 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். வீடுகளை இழந்த லட்சக்கணக்கானோர் பாதுகாப்பு தேடி எல்லை பகுதியில் தஞ்சம் அடைந்தனர். இந்தப் போரை நிறுத்துவதற்காக கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இரு தரப்பினரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதன் பயனாக இருதரப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, ஹமாஸ் அமைப்பினர் சிறை பிடித்து வைத்துள்ள 33 பணய கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இதேபோல் தங்களிடம் உள்ள பணய கைதிகளை விடுவிக்கவும், புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்களது சொந்த கிராமத்துக்கு செல்ல வகைசெய்யவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.
போா் நிறுத்த வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு அண்மையில் ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் காசாவில் 2023-இல் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது.
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணயக்கைதிகள் திரும்புவதற்கான கட்டமைப்பிற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான கட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும், ”என்று தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் காசாவுக்குள் நுழைவதற்கான மனிதாபிமான உதவிக்கான ஏற்பாடுகளும் அடங்கும். பாலஸ்தீனிய நிவாரண நிறுவனமான யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ (UNRWA) 4,000 டிரக் உதவிகளை கடலோரப் பகுதிக்குள் நுழையத் தயாராக உள்ளது, இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
"அது நடக்கும் என்று நான் நம்புகிறேன், அதனால் நாங்கள் சூப் கிச்சன்களுக்குச் செல்லாமல், மூன்று அல்லது நான்கு மணிநேரம் (உணவு) பெற முயற்சி செய்யாமல், நம் வீடுகளில் சமைத்து நமக்குத் தேவையான உணவைச் செய்ய முடியும். அதுதான் எங்கள்வீடு” என்று இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர் ரீஹாம் ஷேக் அல்-ஈத் கூறினார்.