US Visa Applicant’s Social Media Handles Details : உலகெங்கிலும் பரவி வரும் தீவிரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் பொருட்டு தற்போது அமெரிக்காவில் விசா வழங்கும் நடைமுறையில் பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தற்போது அமெரிக்காவில் வேலைக்கு அல்லது சுற்றிப்பார்க்க என எதற்காக சென்றாலும் கடந்த ஐந்தாண்டு காலத்தில் நீங்கள் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் மட்டும் தற்போது நீங்கள் பயன்பாட்டில் வைத்திருக்கும் சமூக வலைதளங்களின் விபரங்கள் என அனைத்தையும் சமர்பிக்க வேண்டும்.
விசாவிற்கு விண்ணப்பம் செய்பவர்கள் நேரடியாக முகநூல் கணக்குகள் மற்றும் சமூக வலைதள கணக்குகள் இல்லை என்று சொல்லிவிடலாம் . ஆனால் அது பொய்யாக இருக்கும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை சந்திக்கவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையையும் விடுத்துள்ளது அமெரிக்கா.
சமீபமாக தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நாடுகளுக்கு சென்று வந்த பயணிகள் 65,000 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதோடு, அவர்களின் சமூக வலைதள தகவல்களும் பெறப்பட்டுள்ளன. தற்போது இதே விதிமுறைகள் 14 மில்லியன் நான் மைக்ரண்ட் விசாவிற்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கும், 7 லட்சம் மைக்ரண்ட் விசாவிற்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : அமெரிக்காவில் காலிங் பெல்லை அடிக்க முயலும் முதலை: வைரலாகும் வீடியோ
சமீபமாக உலகெங்கிலும் நடைபெற்றுவரும் தீவிரவாத தாக்குதல்களில் மிக முக்கிய பங்கு பெறுகின்றது சமூக வலைதளங்கள். மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த நினைப்பவர்கள், தீவிரவாத சித்தாந்தங்கள் கொண்டவர்கள், மற்றும் அபாயகரமான தனிநபர்கள் இந்த திட்டத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டு அமெரிக்காவில் வேரூன்றுவதை தடுத்து நிறுத்திவிடலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
மற்றொரு சாரர், இது நிச்சயமாக தனிநபர்கள் மற்றும் அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டவர்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல் என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.