Yearender 2021 most most destructive climate disasters : காற்றில் வெளியிடப்படும் பசுமையக வாயுக்களால் புவியின் காலநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சமீபத்திய மாற்றங்களால் ஏற்படும் பேரழிவுகள் அதிக அளவில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. 2021ம் ஆண்டு அவ்வாறு ஏற்பட்ட மிக முக்கியமான ஐந்து காலநிலை மாற்ற நிகழ்வுகளை நாம் இங்கே காண உள்ளோம்.

டெக்சாஸ் பனிப்புயல் (Texas Winter Storm)
பிப்ரவரி மாதம் 2ம் தேதி முதல் 20ம் தேதி வரை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த பனி புயல் காரணமாக 210க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டெக்சாஸ் பனிப்புயலால் 23 பில்லியன் டாலர் மதிப்பில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. பசுபிக் பெருங்கடலில் உருவான இந்த பனிப்புயல் நகர்ந்து அமெரிக்காவை தாக்கியது. 150 மில்லியன் மக்கள் இந்த கடுமையான இயற்கை சவாலை எதிர்கொண்டனர். அடிப்படை வசதிகள், உணவுப் பொருட்கள் மற்றும் மின்சார வசதி ஏதுமின்றி பலர் கஷ்டப்பட்டனர். லட்சக்கணக்கான கட்டடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 210 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும் கூட உண்மையான இழப்பு இதைக் காட்டிலும் மூன்று மடங்காக இருக்கலாம் என்று பலரும் கூறியுள்ளனர்.

ஆஸ்திரேலிய வெள்ளம் (Australian Floods)
மார்ச் மாதம் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை நீடித்த இந்த ஆஸ்திரேலிய வெள்ளத்தில் பெரும்பான்மையான உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன. 2.1 பில்லியன் டாலர்கள் மதிப்பில் சேதங்கள் ஏற்பட்டது. கிழக்கு ஆஸ்திரேலிய கடற்கரை பகுதிகளில் இந்த வெள்ள நிகழ்வு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். புதிய தெற்கு வேல்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் சிட்னி நகர், வரலாற்றில் இதுவரை காணப்படாத ஈரமான காலநிலையை இந்த குறிப்பிட்ட காலத்தில் அனுபவித்தது. பாரீஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள படி கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தவில்லை என்றால் இத்தகைய நிகழ்வுகள் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 80 மடங்கு அதிகரிக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
2-வது வாரமாக… கலெக்டர் ஆபிசுக்கு அரசு பஸ்சில் வந்த ஆட்சியர் லலிதா!

ஃப்ரெஞ்ச் குளிர் அலைகள் (French Cold Wave)
ஏப்ரல் மாதம் 4 முதல் 8 தேதி வரை இந்த நிகழ்வு ஃபிரான்ஸ் மக்களை வாட்டி வதைத்தது. 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் சேதங்கள் ஏற்பட்டன. இந்த ஆண்டில் பிரான்ஸின் அதிகப்படியான திராட்சை சாகுபடிக்கு பெரும் பேரிழவை ஏற்படுத்தியது இந்த குளிர் அலைகள். இந்த ஆண்டில் மத்திய ஃபிரான்ஸ் பகுதிகளுக்கு குளிர்காலம் கதகதப்பாகவும், வசந்த காலம் கடுமையான பனிக்காலமாகவும் நிலவியது குறிப்பிடத்தக்கது. 21ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய விவசாய நஷ்டமாக திராட்சை தோட்டங்களின் அழிவு குறிப்பிடப்பட்டது. ரோனே பகுதியில் பயிரப்பட்ட 80% பயிர்கள் இந்த கடுமையான குளிரில் சேதம் அடைந்தன. காலநிலை மாற்றத்தால் இத்தகைய குளிர் அலைகள் சமீபத்தில் 60% அதிகரித்திருப்பதாக World Weather Attribution- அமைப்பின் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

டக்டே புயல் (டவ்-தே புயல்) (Cyclone Tauktae)
டவ்தே புயல் மே மாதம் 14 முதல் 19 வரை நீடித்தது. அரபி கடலோர மாவட்டங்களுக்கு நல்ல மழையை கொடுத்தாலும் கரையை கடக்கும் போது பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் சிக்கி 198 நபர்கள் உயிரிழந்தனர். இந்த புயல் காலத்தின் போது சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டனர். இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது இந்த புயல். இதனால் ஏற்பட்ட பொருட்செலவு மட்டும் சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அரபிக் கடலில் உருவாகிய டவ்-தே புயல் இந்தியாவின் மேற்கு கடற்கரை நோக்கி நகர்ந்தது. மாலத்தீவு மற்றும் மற்றும் இலங்கையையும் அதிக அளவில் பாதித்தது. 1999ம் ஆண்டுக்கு பிறகு குஜராத்தில் கரையைக் கடந்த மிகவும் வலுவான புயலாக டவ்தே புயல் பதிவானது. சாதகமான காற்று மற்றும் நிலவிய காலநிலை புயலை வலுப்படுத்தியதோடு, புயலுக்கு எதிரான தயார் நிலையை கேள்விக்குறியாக்கியது.

யாஸ் புயல் (Cyclone Yaas)
இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்திய மற்றொரு புயல் இது. இதன் மூலம் 3 பில்லியன் மதிப்பில் இந்தியா மற்றும் வங்க தேச நாடுகளில் சேதம் ஏற்பட்டது. இந்தியா மற்றும் வங்க தேசத்தில் இந்த புயலில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். 11 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டனர் என்கிறது Counting the cost 2021: a year of climate breakdown என்ற அறிக்கை. வங்கக் கடலில் உருவான இந்த புயல் அதி கனமழையை மேற்கு வங்க மாநிலத்திற்கு தந்தது. மேற்கு வங்கத்தில் இருக்கும் ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. ஒடிசாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஏற்படும் வெள்ள நிகழ்வாலும், காலநிலை மாற்றத்தால் ”உடனடி” விளைவை சந்திக்கும் இடத்தில் இருப்பதால் வங்கதேசம் இது போன்ற நிகழ்வுகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கங்கை டெல்டா பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதோடு நிலத்தடி நீரில் உப்பு நீர் கலப்பும் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இதர முக்கிய பேரிடர் நிகழ்வுகளும் இழப்புகளும்
அதிக பொருள் சேதாரத்தை ஏற்படுத்திய நிகழ்வாக ஐடா புயலும் (65 பில்லியன் அமெரிக்க டாலர்கள்), ஐரோப்பாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வாக ஐரோப்பிய வெள்ள நிகழ்வும் பதிவு செய்யப்பட்டது. ஜெர்மனி, ஃப்ரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம் , லக்ஸ்கம்ப்ர்க் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சிக்கி 240 பேர் உயிரிழந்தனர். 43 பில்லியன் அளவில் பொருள் சேதங்கள் ஏற்பட்டன. இந்த ஆண்டு சீனாவில் ஏற்பட்ட ஹெனான் வெள்ளம் போது சுமார் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்தனர். அதிகப்படியான மனித உயிர்களை (302) பலி கொண்ட இயற்கை பேரிடராகவும் இந்த வெள்ளம் அமைந்தது.