American Tamil Radio to broadcast voices of Irular children : கோவை மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் இருளர் பழங்குடிகள் அதிகம் வசித்து வருகிறார்கள். இருளர் பழங்குடி கிராமங்களில் ஒன்றான ராயர் ஊத்துபதி பகுதியில் வசித்து வருகிறார் 11ம் வகுப்பு படிக்கும் கனிகா. தமிழில் கதைகளை படித்து அதை இருளர் மொழியில் மொழி பெயர்த்து கூறிக் கொண்டிருந்தார் கனிகா. சிறந்த கதைசொல்லியாக தன்னை வளர்த்துக் கொள்ளும் கனிகா தன்னுடைய மொழியேலே கதைகளை கூற ஆரம்பத்தில் பெரும் சிரமப்பட்டார்.
மேலும் படிக்க : கொரோனா ஊரடங்கு : ஆனைமலை பழங்குடிகளுக்கு உதவ தடையாய் இருக்கிறதா வனத்துறை?
எழுத்துரு இல்லாத இருளர் மொழியில் தமிழ் மற்றும் மலையாள வார்த்தைகளும் புழக்கத்தில் உள்ளது. இப்பழங்குடியினர் தங்களின் மொழிக்கான எழுத்துருக்களை உருவாக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். எங்களின் மொழியை எழுத நாங்கள் தமிழையே பயன்படுத்தி வருகின்றோம். இருப்பினும் ல, ர வரிசையில் எங்கள் உச்சரிப்பிற்கு ஏற்ற எழுத்து எது என்பதில் இன்னும் குழப்பம் இருக்கிறது. சில பொருட்களை எங்கள் மொழியில் எப்படி அழைக்கின்றோம் என்றும் எங்களுக்கு தெரியவில்லை. இந்த காலகட்டத்தில் எங்களின் பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளிடம் இருந்து அதனை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள் இருளர் குழந்தைகள்.
தமிழில் கதைகளை படித்து அதை இருளர் மொழியில் கதை கூற ஆரம்பித்துள்ளனர். எங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை எங்கள் தாத்தா பாட்டிகள் எங்களுக்கு கதையாக கூற எங்கள் மொழிக்கூற்றில் தமிழில் எழுதி வருகின்றனர். 2018ம் ஆண்டின் பிற்பகுதியில், நூலால் எழுதுவோம் என்ற இயக்கத்தின் மூலம், இருளர் மொழியை மீட்டெடுக்கும் பொறுப்பில் இறங்கினார் தன்னார்வலர் மற்றும் எழுத்தாளருமான ஒடியன் லெட்சுமணன்.
ஆர்வமுடன் இம்மொழியை கற்று வரும் இருளர் குழந்தைகளின் கதை சொல்லல் நிகழ்வானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி அன்று அமெரிக்காவில் ஒலிபரப்பாகிறது. அமெரிக்காவில் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் சூரியா நாகப்பன், அமெரிக்கன் தமிழ் ரேடியோவில் இக்குழந்தைகளின் கதை சொல்லல் நிகழ்வை ஒலிபரப்ப ஏற்பாடு செய்துள்ளார். 6 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த வானொலி தமிழர்களால் அதிகம் வரவேற்கப்படும் ஒன்றாக இருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
ஒரு வருடத்திற்கு இந்நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது அமெரிக்கன் தமிழ் ரேடியோ. தமிழைப் போன்றே இருளர் மொழியும் இருப்பதால் அதற்கான விளக்கம் தர தேவையில்லை என்று கூறும் அந்த வானொலி நிலையம் இரு முறை அந்நிகழ்வுகளை ஒலிபரப்ப உள்ளது. மேலதி, அத்திகடவு, ஆலமரமேடு, கொண்டனூர், ஆனைகட்டி மற்றும் இந்த சுற்றுவட்டாரப்பகுதியில் அமைந்திருக்கும் இருளர் குடியிருப்பில் இருக்கும் குழந்தைகள் தொடர்ந்து தங்கள் மொழியில் கதைகள் கூற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : இன்றும் பருத்தி தோட்ட வேலைக்கு குழந்தைகள் செல்கிறார்கள் – ஆசிரியர் மகாலட்சுமி