/indian-express-tamil/media/media_files/2025/01/20/1KZVcHwubJ11ey0yZcd2.jpg)
உடல் வலிமையாக இருக்க வேண்டுமென்றால் எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான மருந்துகள், உணவுகள் குறித்து மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
பலருக்கு தொடர்ச்சியாக மூட்டுகளில் வலி இருக்கும். குறிப்பாக, நடக்கும் போது அல்லது எழுந்திருக்கும் போது மூட்டுகளில் இருந்து சத்தம் வரும். மூட்டுகளில் அணுக்களின் பரிமாற்றம் நிகழும் போது இது போன்ற சத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
ஆனால், மூட்டுகளில் வலி அதிகமாக ஏற்பட்டாலோ அல்லது வீக்கம் இருந்தாலோ நிச்சயம் சிகிச்சை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கால்சியம் குறைபாடு இருப்பவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதை சீரமைக்க கால்சியம் மற்றும் புரதம் இருக்கும் உணவுகளை சாப்பிடலாம் என மருத்துவர் நித்யா பரிந்துரைத்துள்ளார்.
குறிப்பாக, முடக்கத்தான் கீரை, முருங்கை கீரை ஆகியவை உணவில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். இதேபோல், பிரண்டையை சூப் வைத்து அல்லது துவையலாக சாப்பிடலாம். இவை எலும்புகளுக்கு வலு சேர்க்க உதவும். முடவாட்டுக்கால் கிழங்கையும் சூப் வைத்து குடிக்கலாம்.
இது தவிர தினமும் இரவு பாலுடன் சிறிது மஞ்சள் பொடி, அமுக்கரா கிழங்கு பொடி ஆகியவை சேர்த்து குடிக்கலாம். இவை மூட்டுகளில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்தி, எலும்புகளை வலுவாக்கும். இதேபோல், வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் நித்யா குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.