நாம் எப்படி தூங்குகிறோம் என்பதற்கும் நம்முடைய ஆரோக்கியத்திற்கு தொடர்பு இருக்கிறது. பலர் தலையணை பயன்படுத்தி, தங்களது தலையை சற்று உயர்த்தி தூங்குவதை பழக்கமாக கொண்டிருப்பார்கள். இதனால் ஏற்டும் நன்மைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Experts reveal what happens when you sleep with your head elevated
"தூக்கத்தில் தலையை உயர்த்தி வைத்திருக்கும் போது, ஈர்ப்பு விசையானது தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள இரத்த நாளங்களில் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது" என்று மூத்த நரம்பியல் நிபுணரான மருத்துவர் சந்திரில் சுக் தெரிவித்துள்ளார்.. எனினும், "மிக அதிகமாக தலையை உயர்த்தி விட்டால், அது இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தி அசௌகரியம் அல்லது விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும்" என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த நிலையில் தூங்குவது பயனளிக்கலாம் எனக் கூறப்படுகிறது. "தலையை உயர்த்துவது வயிற்று அமிலம் உணவுக்குழாயில் மீண்டும் பாய்வதைத் தடுக்கிறது. இரவில் நெஞ்செரிச்சல் மற்றும் அசௌகரியம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது ஏனெனில் ஈர்ப்பு விசை இங்கே ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது" என மருத்துவர் கார்த்திக் ரெட்டி தெரிவித்துள்ளார்.
"தலை சரியான கோணத்தில், பொதுவாக 15-30 டிகிரிக்கு இடையில் சற்று உயர்த்தப்படும் போது, முதுகெலும்பை நடுநிலையாக பராமரிக்க உதவும்" என மருத்துவர் சந்திரில் சுக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இரண்டு நிபுணர்களும் தவறான உயரம் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதை எடுத்துக்காட்டுகின்றனர். "தலையை மிக உயரமாக அல்லது ஒரு மோசமான கோணத்தில் வைத்து தூங்குவது முதுகெலும்பின் தவறான அமைப்பிற்கு வழிவகுக்கும் என்றும் கழுத்து தசைகள் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றும் மருத்துவர் கார்த்திக் ரெட்டி எச்சரிக்கிறார்.
ஒவ்வொருவருக்கும் தூங்கும் தன்மை மாறுபடும் எனக் கூறப்படுகிறது. இதில் தூங்கும் அமைப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாச பிரச்சனைகள் கொண்டவர்கள் தலையை உயர்த்தி தூங்கும் போது, காற்றோட்டம் சீராகும் என்றும், இதனால் அடிக்கடி விழித்துக் கொள்வது தவிர்க்கப்படுகிறது என்றும் மருத்துவர் கார்த்திக் ரெட்டி கூறுகிறார். ஆனால், இது சரியாக இல்லாவிட்டால், அசௌகரியம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவர் சந்திரில் சுக் தெரிவித்துள்ளார்.
செரிமானக் கோளாறு உள்ளவர்கள், குறட்டை விடும் பிரச்சனை இருப்பவர்கள், சைனஸ் தொல்லை இருப்பவர்கள் போன்றவர்கள் தலையணை வைத்து தலையை சற்று உயர்த்தி தூங்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
முதுகு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சனை இருப்பவர்கள் இவ்வாறு தூங்குவதை தவிர்க்க வேண்டும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. சரியான படுக்கை, தலையணை தேர்ந்தெடுத்தல் அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“