வாயு பிரச்சனை என்பது இளம் வயதினருக்கும் வயதானவருக்கு இருக்கக்கூடிய ஒரு சாதாரணமான பிரச்சனை ஆகும். இந்த வாய்வை சரியாக கணிக்காமல் இருந்தால் வாய்வு தொல்லை, உடலில் மூட்டு வலிகள், வயிற்றுக் கோளாறு என பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். வாய்வு பிரச்சனையை அலட்சியப்படுத்தினால் இது பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் சித்த மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
வாய்வு தொல்லை இருப்பவர்கள் சோடா குடித்து ஏப்பம் விட்டால் சரியாகிவிடும் என வீட்டிலேயே சின்ன சின்ன மருத்துவம் செய்துவிட்டு அலட்சியமாக விட்டுவிடுவார்கள். ஆனால் பிற்காலத்தில் இது வயிற்றுப்புண் மூட்டு வலி வயிறு சம்பந்தப்பட்ட கோளாறு என பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்.
இந்த வாய்வு மூட்டு வலியை ஏற்படுத்துவதே பல நவீன மருத்துவர்களுக்கு தெரிவதில்லை அவர்கள் கூறுவதெல்லாம் வாய்விற்கும் மூட்டு தேய்மானத்திற்கும் எந்த காரணமும் இல்லை என்று. ஆனால் சித்தமருத்துவமும் தமிழ் மருத்துவமும் வாய்வு இல்லாமல் வாதம் வராது என்று கூறுகிறது.
வாய்வு பிரச்சனை இருப்பவர்களுக்கு அவர்கள் சாப்பிடக்கூடிய உணவில் இருந்து தேவையான சத்துக்கள் உடலில் சேராமல் பல்வேறு உடல் கோளாறுகளை ஏற்படுத்தும், வாய்வு பிரச்சனை உள்ளவர்களுக்கு தொடர் ஏப்பம், உப்பிய வயிறு, நிறைய வாய்வு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
இந்த மாதிரியான வாய்வு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் சோர்வாக இருக்கும். காலையில் வாய்வு பிரச்சனை இருப்பவர்களுக்கு இரவில் பசி இருக்காது. இரவில் வாய்வு தொல்லை இருப்பவர்களுக்கு காலையில் சரியாக மலம் கழிக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
சரி செய்ய வழிகள்:
தினசரி மூன்று வேளையும் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். அதிக காரம், எண்ணெயில் பொரித்த பாஸ்புட் உணவுகள், வலி மாத்திரைகள், புகைப்பழக்கம், மது அருந்துதல், பசி நேரத்திலும் சாப்பிடாமல் இருத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தினமும் மதியம் 11 மணி அளவில் ஒரு டம்ளர் மோரில் சிறிது பெருங்காயம் கலந்து குடிக்க வேண்டும்.
மேலும் காலை - மாலை இருவேளையும் புதினா சட்னி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருவேப்பிலை, கருஞ்சீரகம், ஏலம், பெருங்காயம், பெருஞ்சீரகம், கருவேப்பிலை எல்லாம் வறுத்து அன்னப்பொடி செய்து இந்துப்பு கலந்து கொஞ்சம் உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்வு உடலில் தங்காது.
உருளைக்கிழங்கு, வாழைக்காய், கொண்டை கடலை, மொச்சை பயிர் போன்ற உணவை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒருவேளை இதனை சாப்பிட்டாலும் இஞ்சி, புதினா, சீரகம் இவற்றையும் சேர்த்து சாப்பிட வேண்டும். உணவில் சரியான அக்கறை எடுக்கவில்லை என்றால் வாய்வு தொல்லை வரும் .
இதனால் வயிற்றுப்புண், நெஞ்சு எரிச்சல், சாப்பிட்ட பிறகு குமட்டல் உணர்வு, அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது போன்ற சாதாரண வாய்வால் உடலில் நிறைய பிரச்சினைகள் உண்டாகும். முதலிலேயே இதனை கண்டு பிடித்து விட்டால் இதனை விரைவில் சரி செய்து விடலாம் என்றும் மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“