![Healthy food Tamil News: idli maavu pulikamal iruka tips](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2021/08/IDLY-MAAVU.jpg)
idli maavu preparation in tamil: நம்முடைய வீடுகளில் இட்லி, தோசைக்கு நாம் அரைக்கும் மாவு அரைத்த சில நாட்களிலேயே புளித்து விடுகிறது. அதிகபட்சமாக 3 நாள் வரை புளிக்காமல் இருக்கிறது. இப்படி நாம் கடினப்பட்டு அரைக்கும் மாவு சீக்கிரமே புளித்து விட்டால் நாம் மீண்டும் மாவு அரைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்த மாவு ஒரு வாரம் ஆனாலும் கொஞ்சம் கூட புளிக்கவே கூடாது என நீங்கள் விரும்பினால் நிச்சயம் இந்த செய்முறையை முயற்சித்து பாருங்கள்.
இந்த எளிய முறைக்கு முதலில் நாம் இட்லி, தோசைக்கென அரைக்கவுள்ள அரிசியை அதிகம் நேரம் ஊற வைக்கக் கூடாது. அவற்றை அதிகபட்சமாக 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை ஊற வைத்தால் போதுமானது.
உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்தாலே போதும் அவை நன்கு ஊறி விடும்.
மாவு அரைக்கும் பொழுது நீண்ட நேரம் அரைக்கக் கூடாது. மாவு அரைபட்டவுடன் சீக்கிரமே அள்ளுவது மிகவும் நல்லது.
மாவு அரைக்கும் போது ஐஸ் வாட்டர் பயன்படுத்தி அரைப்பது நல்ல ஐடியாவாக இருக்கும்.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-18T213927.884.jpg)
முதலில் உளுந்தை போட்டு ஆட்டும் போது சிறிதளவு ஐஸ் வாட்டரை ஊற்றி விட்டு பின்னர் உளுந்தை அதில் சேர்க்க வேண்டும். உளுந்து நன்கு பொங்க பொங்க ஆட்ட தண்ணீரை இடையிடையே ஜில்லென்று தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
உளுந்து அரைபட அதிகபட்சமாக 25 நிமிடங்கள் முதல் 30 நிமிடம் போதுமானது. மாவை கிரைண்டர் உள்ளே தள்ளுவதற்கு மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் கரண்டி போன்றவற்றை பயன்படுத்தவும்.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-18T214012.368.jpg)
அரிசியை போடும் முன் ஐஸ் வாட்டரை சிறிதளவு தெளித்து விட்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அரிசியை போட்டு அரையவிட வேண்டும். அரிசி அரைபட 15 முதல் 20 நிமிடங்கள் போதுமானது. மேலும் அரிசி நொறுநொறுப்பாக, அதாவது 90% அரிசி அரைப்பட்டு இருந்தால் போதுமானதாக இருக்கும்.
இப்போது அரிசி அரைபட்டு முடிந்ததும் அதை எடுத்து உளுந்துடன் சேர்த்து கிரைண்டரிலேயே கலந்து விடுங்கள். பிறகு அவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளலாம். இங்கு நீங்கள் உப்பு சேர்க்க கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.
தொடர்ந்து இட்லிக்கு மட்டும் தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து விட்டு மீதம் இருக்கும் மாவை உப்பு போடாமல் அப்படியே பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவும்.
இட்லிக்கு மட்டும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக்கொள்ளவும். இப்படி நீங்கள் 3 மணி நேரம் மட்டும் வைத்திருந்தால் போதும், அதன்பிறகு ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விடலாம் .
பின்னர் காலையில் எழுந்தவுடன் புளித்த மாவை வெளியில் எடுத்து அதில் இட்லி தயார் செய்து கொள்ளலாம். அதே வேளையில் ஃப்ரிட்ஜில் இருக்கும் மாவை தேவையான நேரத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து தோசை சுட்டு ருசிக்கவும்.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-18T212905.787.jpg)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.