Pongal 2020 Samathuva pongal, Yaanai pongal, Pongal celebrations : தமிழர் திருநாளான பொங்கலில் மதங்களுக்கும், சாதிகளுக்கும் என்றுமே முக்கியத்துவம் தரப்பட்டதில்லை. எப்போதும் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகவே இருக்கிறது. நமக்கு உணவினை படைக்கும் விவசாயிகளுக்கும், விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாகவே பொங்கல் இருக்கிறது. சாதி, சமயம் மறந்து இந்த விழா தமிழகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெருவிழாவாக நடத்தப்படுகிறது.
சமத்துவம் பேசும் பொங்கல்
சில ஊர்களில், ஊர் பொதுமக்கள் ஒன்றாக கூடி சமத்துவ பொங்கல் வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அங்கு இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்கள் ஒன்றாக கூடி பொங்கல் வைத்து, தமிழர் திருநாளை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். சில நேரங்களில் தேவாலயங்களில் பொங்கல் விழா வெகு விமர்சையாகவும் கொண்டாடப்படும். குழந்தைகள், இளைஞர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுப் பொருட்கள் தருவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
கல்லூரிகளில் கொண்டாடப்படும் சமத்துவ பொங்கல்
கல்லூரிகளில் மாணவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். கோவை, தேனி பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் கல்லூரிகளில் தமிழக கேரள மாணவர்கள் ஒற்றுமையாக இணைந்து இந்த பண்டிகைகளை கொண்டாடுவார்கள்.
யானைப் பொங்கல்
யானைகள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒரு பகுதியாக இருக்கும் கோவை டாப்ஸ்லிப் பகுதிகளில் யானைகள் முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இங்கே மாட்டுப் பொங்கல் தினத்தன்று யானைகளுக்கு வனச்சரகர்கள் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடுவார்கள். யானைகள் அனைத்தையும் குளிக்க வைத்து அதற்கு சில நேரங்களில் அளவான அலங்காரங்கள் எல்லாம் செய்து இந்த பொங்கல் கொண்டாடப்படுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். பின்னர் பொங்கல், கரும்பு, வெல்லம், தேங்காய், வாழைப்பழம் ஆகியவை யானைகளுக்கு உணவாக வழங்கப்படும். இது டாப்ஸ்லிப்பில் இருக்கும் கோழிக்கமுத்தி மற்றும் சின்னார் முகாம்களில் கொண்டாடப்படும். பின்னர் நீலகிரி மாவட்டம் தெப்பாக்காடு யானைகள் முகாமிலும் இது போன்று யானைப் பொங்கல் கொண்டாடப்படும்.
மேலும் படிக்க : சீறிப்பாயும் காங்கேயம் காளை! நின்னு வெளையாடும் புலிக்குளம் காளை… ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் தமிழகம்!