தை மாதம் ஒன்றாம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. வேளாண்மை தொழில் நிறைந்துள்ள தமிழகத்தில் பொங்கல் திருவிழா தனித்தன்மையாகவும் கருதப்படுகிறது. மேலும், தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் முதல் நாள் காப்புக் கட்டுவது (மார்கழி மாதத்தின் இறுதி நாள்) வழக்கமாகவும் கருதப்படுகிறது.
இந்த திருநாளில், மக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து சூரிய பகவானுக்கு வணக்கம் செலுத்துகின்றனர். வாழைப்பழம், வெற்றிலை, அவல் பொரி, கற்கண்டு, கரும்பு, மஞ்சள் போன்றவைகளை இலையில் வைத்து சூரியனுக்குப் படையல் வைக்கின்றனர். அன்று கிராமங்களில் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை "பொங்கல் பொங்கியாச்சா" என்ற கேள்விகளின் மூலம் தெரிவிக்கின்றனர்.
பொங்கலுக்கு மறுநாள் (தை இரண்டாம் நாள் ) மாட்டுப் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இதனைக் கிராமப் புறங்களில் 'பட்டிப் பொங்கல்' என்று கூறுவது வழக்கம். அதாவது, மாடுகள் அடைக்கும் பட்டிக்கு அருகில் பொங்கல் வைப்பதால் இதனை பட்டிப் பொங்கல் என்கின்றனர். இந்நாளில் தங்கள் மாடுகளை விளைந்த கொள்ளுக் காடுகளில் மேயவிடுகின்றனர். இதனை பணி மேய்ச்சல் என்று அழைப்பதுண்டு.
தமக்கு உதவியாக உழைத்த கால்நடைகளுக்கும், விளைகச்சல் தந்த நிலத்திற்கும் மரியாதை செய்வதுமாகத் கொண்டாடுவதால், இது நன்றி விழா என்றும் கூறப்படுகிறது. பொங்கல் விழாவிற்கு ஆரம்பக் காலத்தில் சூரிய விழா என்றும் அழைக்கபட்டது.