எங்கு பார்த்தாலும் ஊட்டியைப் போல குளிர் வாட்டி எடுக்கிறது. சில இடங்களில் விஷப்பனி பெய்கிறது. சிறிது தூரம் வாகனத்தில் வெளியே சென்று வந்தால் கூட, உடல் சுணக்கமாக இருப்பது போல் தோன்றுகிறது. இனி சளி, இருமல், தொண்டை வலி என்று ஒவ்வொரு நிலையையும் கடக்க வேண்டியிருக்கும். அதனை முடிந்த அளவு தடுப்பதற்கு சில எளிய டிப்ஸ் இதோ,
தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும், தொண்டை உறுத்தலை நீக்கும், சளியையும் குறைக்கும்.
இஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இது விரைவில் நீக்கும்.
சிறிது ஆளி விதையை நீரில் கொதிக்கவைத்தால் பசை மாதிரி ஆகிவிடும். இதனுடன் இயற்கை ஆன்டிபயாடிக்குகளான (Antibiotics) எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்துப் பருகிவர தொண்டை வீக்கம் குறையும்.
கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.
சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது மஞ்சள் பால்.
என்னதான் இது போன்ற இயற்கை முறைகளை பயன்படுத்தி சளி, இருமலை குறைத்தாலும், அது நம்மை அண்டாமல் இருப்பதற்கு ஒரு வழி இருக்கிறது… என்ன தெரியுமா? சுடு தண்ணீர்.. கேட்க சிரிப்பாகத் தான் இருக்கும். ஆனால், இந்த குளிர்காலம் முழுக்க சுடு தண்ணீரை மட்டும் குடித்துப் பாருங்கள், உங்களை சளி அண்டவே அண்டாது.