திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரும், யோகா ஆசிரியருமான விஜயகுமார், வழக்குரைஞர் சித்ரா தம்பதியின் மகள் கீர்த்தனா. பி.காம். எல்.எல்.பி. ஹானர்ஸ் சட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இளம் வயதிலேயே தனது தந்தை செய்யும் யோகா பயிற்சியினைப் பார்த்து தானும் யோகா பயிற்சி செய்து அதை நூலாக வெளியிட வேண்டும் என்ற நோக்கில், ‘யோகா’, ‘எளிய உடற்பயிற்சி’, ‘சூரிய நமஸ்காரம்’, உள்ளிட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். தனது பெற்றோருடன் இணைந்து உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதைப் பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: வைட்டமின் சி காப்ஸ்யூல் இப்படி யூஸ் பண்ணவே பண்ணாதீங்க… தோல் மருத்துவர் டிப்ஸ்
இந்தநிலையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அதனை சிறப்பிக்கும் வகையில் தனது கூந்தலை தானம் செய்துள்ளார்.
இது குறித்து கீர்த்தனா தெரிவித்ததாவது;
புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையின்போது தலைமுடியை இழப்பவர்களுக்கு உதவுவதற்காக கூந்தலை தானமாக வழங்கியுள்ளேன்.
புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையின்போது தலைமுடியை இழப்பவர்களுக்கு உதவுவதற்காக தங்கள் கூந்தலை தானமாக வழங்க சில வரைமுறைகள் இருக்கின்றன.
தலைமுடியை சரியாக கத்தரித்து வழங்காவிட்டால் தானமாக வழங்கும் முடி பயனற்று போய்விடும். தானம் செய்யக்கூடிய முடி குறைந்தபட்சம் 8 அங்குலங்கள் முதல் 14 அங்குலம் வரை இருக்க வேண்டும். குறைந்தபட்ச நீளத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தலை முடியை விக் வடிவில் தயாரித்து வழங்கும் தொண்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. அவர்கள் முடியின் நீளம், அடர்த்தி போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான கூந்தலை தானமாக பெறுகின்றனர். சில தொண்டு நிறுவனங்கள் வண்ணங்கள் பூசப்பட்ட முடிகளை நிராகரித்துவிடுகின்றன. ரசாயன சிகிச்சை மேற்கொண்டிருந்தாலும் அத்தகைய முடிகளை வாங்குவதில்லை. சில தொண்டு நிறுவனங்கள் நீளமான முடியை மட்டுமே வாங்குகின்றன. முடியின் அடர்த்தி எப்படி இருக்கிறது என்பதையும் சில நிறுவனங்கள் கருத்தில் கொள்கின்றன.
தானமாக கொடுக்கப்போகும் கூந்தலை இயற்கையான முறையில் பராமரித்து உலர்வாக வைத்துக்கொள்ள வேண்டும். கூந்தலை எந்த பகுதியில் இருந்து வெட்ட போகிறீர்களோ அங்கு இறுக்கமாக ரப்பர் பேண்டை மாட்ட வேண்டும். கூந்தலின் நுனிப்பகுதி வரை முழுவதுமாக வெட்டிவிடக்கூடாது. கூந்தலின் நீளமும், அடர்த்தியும் ஒரே அளவில் இருக்க வேண்டும். அதனால் கூந்தலின் நுனிப் பகுதிக்கு அருகில் மற்றொரு ரப்பர் பேண்டை மாட்ட வேண்டும். இரு ரப்பர் பேண்டுக்கும் இடையே கூந்தல் எவ்வளவு நீளம் இருக்கிறது. அந்த நீளம் தானமாக பெறும் நிறுவனத்தின் விதிமுறைக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை கவனத்தில் கொண்டு முடியை வெட்ட வேண்டும். இவ்வாறு கீர்த்தனா கூறினார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil