wheat rava recipes in tamil: உப்புமா என்றாலே சிலருக்கு முகம் துளிக்கும். ஆனால் இந்த அற்புதமான உணவை முறையாக தயார் செய்தால் அதன் ருசியே தனி தான். சம்பா ரவை என்று அழைக்கப்படும் கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்த ஒன்றாக உள்ளது.
இப்படி ஆரோக்கிய நற்பயன்களை கொண்டுள்ள கோதுமை ரவை உப்புமா செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
கோதுமை ரவை உப்புமா செய்யத் தேவையான பொருட்கள் :-
கோதுமை ரவை – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
வரமிளகாய் – 2
இஞ்சி – சிறிது
கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :-
முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் அதில் பொருங்காயத்தூளை தூவி, வரமிளகாயை கிள்ளிப் போட்டு, இஞ்சியை தட்டிப் போட்டு கிளறவும். தொடர்ந்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை அதில் இட்டு நன்கு வதக்கவும்.
இவை நன்றாக வதங்கியதும், அவற்றோடு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்ததும், அதில் கோதுமை ரவையை சேர்த்து, நன்றாக கிளறி சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைக்கவும். பின்னர் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி இறக்கவும்.

இப்போது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடியாக இருக்கும். அவற்றை தேங்காய் சட்னியுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“