Triple Talaq Bill - முத்தலாக் மசோதா மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. காங்கிரஸ், அதிமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இன்று மிக முக்கியமான மசோதாவைப் பற்றிய விவாதம் நடைபெற்று வருகிறது. இஸ்லாமிய மதத்தில் மும்முறை தலாக் சொல்லி விவாகரத்து பெறுவது வெகுநாட்களாக வழக்கத்தில் உள்ளது.
ஆனால் சமீப காலமாக, இஸ்லாமிய பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு, முத்தலாக்கிற்கு செயல் முறைகளுக்கு தடையும், அம்முறையில் விவாகரத்து கேட்கும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் தரப்படும் என்று சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் தொடர்பாக இன்று வாக்கு வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
Triple Talaq Bill - தலைவர்களின் கருத்துகள்
ரவிசங்கர் பிரசாத்
விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். அப்போது “20 இஸ்லாமிய நாடுகளிலேயே இந்த நடைமுறைகள் பழக்கத்தில் இல்லை. ஆனால் இந்தியா போன்ற மதசார்பற்ற நாட்டில் அதை ஏன் செய்ய இயலாது? “ என்று வினவினார். பின்னர் இதை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதிமுக எம்.பி. அன்வர் ராஜா
முஸ்லிம்கள் தனிநபர் சட்டத்தில் மத்திய அரசு நேரடியாக தலையிடுகிறது. அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும், இஸ்லாமிய இளைஞர்களுக்கு எதிராகவும் இந்த சட்டம் இருப்பதால் நான் இதை எதிர்க்கின்றேன் என்று அதிமுக எம்.பி. அன்வர் ராஜா தமிழில் பேசியுள்ளார்.
ஸ்மிரிதி இரானி
”நானூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த முத்தலாக் நடைமுறையால் கணவர்களால் கைவிடப்பட்டுள்ளனர். 400 பெண்களில் ஒருவர் பாதிக்கப்பட்டாலும், நாம் அனைவரும் இங்கு அமர்ந்திருப்பதற்கு அர்த்தமே இல்லை” என்று கூறினார்.
முகமது சலீம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியா கட்சியிம் நாடாளுமன்ற உறுப்பினர் “நீங்கள் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாகத்தான் நடத்துகிறீர்கள். நீங்கள் எப்படி இஸ்லாமிய பெண்களின் நலம் பற்றி யோசிப்பீர்கள்? ஏன் இந்த முதலைக் கண்ணீர் வடிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். 50 ஆண்டுகளாக இஸ்லாமிய பெண்ணியவாதிகள் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். என்னவோ மோடி சொல்வது போல் கடந்த ஐந்து ஆண்டுகளில் முத்தலாக் பிரச்சனைகள் விஸ்வரூபம் பெறவில்லை” என்று கூறினார். இதற்கிடையே முத்தலாக் மசோதா மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. காங்கிரஸ், அதிமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க : சிறுபான்மையினரை எப்படி நடத்த வேண்டும் என பாகிஸ்தான் பாடம் நடத்த தேவையில்லை