Danish Kaneria mistreatment : பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களால், டேனிஷ் கனேரியா இந்து என்பதால், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். அணி வீரர்கள், அவருடன் சேர்ந்து உணவருந்தக்கூட விரும்பியதில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தரின் கருத்தை, டேனிஷ் கனேரியா ஒப்புக்கொண்டுள்ளார்.
டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 2000மாவது ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை விளையாடியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, டேனிஷ் கனேரியா, அடிப்படையில் இந்து மதத்தை சேர்ந்தவர். அவர் திறமையின் காரணமாக, பாகிஸ்தான் தேசிய அணியில் இடம்பிடித்திருந்தார். கனேரியா, அணியில் இடம்பெற்ற போட்டிகளில் எல்லாம், அவர்மீது மதரீதியான பாகுபாடு காட்டப்பட்டது. பாகிஸ்தான் வீரர்கள், கனேரியா கூட பேச மறுப்பு தெரிவித்துள்ளனர். அவருடன் இணைந்து உணவருந்தக்கூட அவர்கள் விரும்பியதில்லை. போட்டிகளில் டேனிஷ் கனேரியா சிறப்பாக செயல்பட்ட போதிலும், அவரை வாழ்த்தவோ அவரது திறமையை அங்கீகரிக்கவோ பாகிஸ்தான் வீரர்கள் ஒருபோதும் விரும்பியதில்லை என்று அக்தர் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அக்தரின் இந்த கருத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பெரும்புயலை கிளப்பியிருந்த நிலையில், டேனிஷ் கனேரியா, அக்தரின் கருத்துக்கள் முற்றிலும் உண்மையானவை. நான் இந்து என்பதால், பாகிஸ்தான் அணி வீரர்களால் புறக்கணிக்கப்பட்டேன். அப்போது என்னால், இந்த விவகாரத்தை வெளியில் சொல்ல முடியவில்லை. இப்போது அவர்களின் பெயர்களை வெளியிடுவதில் எந்த தயக்கமும் இல்லை என்று கூறியுள்ளார்.
'டேனிஷ் கனேரியா ஹிந்து என்பதால் வீரர்களால் அவமதிக்கப்பட்டார்' - உண்மை உடைத்த சோயப் அக்தர்
நான் அணியில் இடம்பெற்றிருந்தபோது சோயிப் அக்தர், இன்சமாம் உல் ஹக், முகம்மது யூசுப் மற்றும் யூனிஸ் கான் உள்ளிட்டோர்கள் மட்டுமே எனக்கு ஆதரவாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேனிஷ் கனேரியா, 261 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சிறந்த ஸ்பின் பவுலர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
2012ம் ஆண்டில் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு தொடர்பாக, அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவியுடன் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து, அவர் அந்த விவகாரத்தில் இருந்து வெளியே வந்தது நினைவுகூரத்தக்கது.
பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த இரண்டாவது இந்து கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா ஆவார். முதல் இந்து வீரர் அனில் தால்பட் ஆவார். கனேரியாவின் உறவினர், 1980ம் ஆண்டுவாக்கில் பாகிஸ்தான் அணியில் வீக்கெட் கீப்பராக விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.