Ind vs Ban Final T20 Scorecard : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. டெல்லியில் நடந்த முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசமும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால், இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டி 20 கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
மேலும் படிக்க - 'யாரிடம் தோற்றாலும் வங்கதேசத்திடம் தோற்கக் கூடாது' - ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இறுதிப் போட்டி
நாக்பூரில் இதுவரை 11 இருபது ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே 8 முறை வெற்றி பெற்றுள்ளன. இதில் இந்திய அணி ஆடிய 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியும் (இங்கிலாந்துக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (இலங்கை, நியூசிலாந்துக்கு எதிராக) கண்டுள்ளது.
2009-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி 215 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். 2016-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 79 ரன்னில் சுருண்டது மோசமான ஸ்கோராகும்.
இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம்.
டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில், க்ருனால் பாண்ட்யா நீக்கப்பட்டு, மனீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.
ரோஹித் ஷர்மா, ஷஃபியுல் வீசிய இன்கமிங் டெலிவரியில் ஆஃப் ஸ்டம்ப்பை பறிகொடுக்க, தவான் 19 ரன்களில் கேட்ச்சானார்.
இந்தியா 10 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, இந்தியா தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், லோகேஷ் ராகுல் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஆனால், அரைசதம் அடித்த சில நிமிடங்களில் 52 ரன்களில் லோகேஷ் ராகுல் கேட்சானார். இந்தியா 94-3. (12.1 ஓவர்கள்)
14.1. 14.2, 14.3 என்று தொடர்ந்து மூன்று பந்துகளையும் மெகா சிக்ஸருக்கு பறக்க விட்ட, ஷ்ரேயாஸ் ஐயர், 27 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
ரிஷப் பண்ட் 6 ரன்களில், சவுமியா சர்கார் ஓவரில் போல்டானார்.
சவுமியா வீசிய அதே ஓவரில், 33 பந்துகளில் 62 ரன்கள் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர் கேட்ச்சானார்.
20 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.
தீபக் சாஹர் ஓவரில், லிட்டன் தாஸ் 9 ரன்களில் வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வங்கதேசம் தனது முதல் விக்கெட்டை இழந்துள்ளது.
சாஹரின் அடுத்த பந்திலேயே, சவுமியா சர்கார் 0 ரன்களில், ஷிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
எட்டு ஓவர்கள் முடிவில், வங்கதேசம் 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.
இரண்டு விக்கெட்டுகள் இழந்த பிறகு, நைம் மற்றும் மிதுன் ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. 10 ஓவர்கள் முடிவில், அந்த அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்துள்ளது.
வாஷிங்டன் சுந்தர் வீசிய 11வது ஓவரில், 17 ரன்கள் எடுக்கப்பட்டது. அபாரமாக விளையாடி வரும் நைம் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
பெரும் போராட்டத்திற்கு பிறகு, 3வது விக்கெட்டை இந்திய அணி வீழ்த்தியது. தீபக் சாஹர் ஓவரில், மிதுன் 27 ரன்களில் கேட்ச்சானார்.
ஆச்சர்யப்ப்படும் விதமாக, துபே ஓவரில் முஷ்பிகுர் ரஹீம் 0(1) ரன்னில் இன்சைட் எட்ஜ் ஆகி போல்டானார்.
ஷிவம் துபே ஓவரில், நைம் 81 ரன்களில் போல்டாக, ஆட்டத்தில் பரபரப்பு கூடியுள்ளது.
அடடா... அதே ஓவரில், ஹொசனை 0 ரன்னில், ஷிவம் துபே அவுட்டாக்க, வங்கதேசம் தனது 6வது விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறது.
இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருந்த மஹ்மதுல்லா, 8 ரன்களில் சாஹல் ஓவரில் போல்டானார்.
வங்கதேசம் 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால், இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்று, 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
தீபக் சாஹர் 3.2 ஓவர்கள் வீசி, 7 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து, 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும். தவிர, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய பவுலர் எனும் பெருமையை சாஹர் பெற்றுள்ளார்.