லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து, 4 விக்கெட்களை எடுத்து, தனது குஜராத் அணியை வெற்றி பெற வைத்துள்ளார் மோகித் ஷர்மா.
ஐ.பி.எல் போட்டிகளில் 30 ஆவது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சஹா 47 ரன்களும், ஹர்திக் பாண்டியா 66 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படியுங்கள்: LSG vs GT Live Score: கடைசி ஓவரில் 4 விக்கெட் : 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் த்ரில் வெற்றி
இதனையடுத்து 136 ரன்கள் இலக்குடன் லக்னோ களமிறங்கியது. பவர்ப்ளே ஓவர்களில் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது, தொடக்க ஜோடி ராகுல் மற்றும் மேயர்ஸ். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் 55 ரன்கள் சேர்த்தனர். அதன்பின்னர் குஜராத் அணி சிறப்பாக பந்து வீசியதால், லக்னோ அணி பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தது. அந்த அணியில் மேயர்ஸ் 24 ரன்களும் குருணால் பாண்டியா 23 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணி 16.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து வலுவான நிலையிலே இருந்தது. அதன்பிறகும் ராகுல் நிதானமாக ஆடி ரன் சேர்த்து வந்தார்.
இந்தநிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. குஜராத் சார்பில் மோகித் சர்மா கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் ராகுல் 2 ரன்கள் சேர்த்தார். ஆனால் அடுத்தப் பந்திலே ராகுல் அவுட் ஆனார். அவர் ஜெயந்த் யாதவிடம் கேட்ச் கொடுத்து 68 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் டக் அவுட் ஆனார். அவர் மில்லரிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்த பந்தை தீபக் ஹூடா சந்தித்தார். நேராக அடித்த ஹூடா 1 ரன் எடுத்து, இரண்டாவது ரன்னிற்கு ஓடும்போது மறுமுனையில் ஆடி வந்த ஆயுஷ் படோனி ரன் அவுட் ஆனார். அடுத்த பந்தை மீண்டும் ஹூடா சந்தித்தார். இந்த பந்தையும் அடித்த ஹூடா 1 ரன் எடுத்து, இரண்டாவது ரன்னுக்கான முயற்சியின்போது ரன் அவுட் ஆனார். கடைசி பந்தைச் சந்தித்த பிஷ்னோய் ரன் எடுக்க முடியாததால், குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
கடைசி ஓவரை சிறப்பாக வீசிய மோகித் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், சிறப்பாக சிக்சர் அடிக்கக் கூடிய தீபக் ஹூடா களத்தில் இருந்தப்போதும், அவரை அடிக்க விடாமல் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார். இதனால் குஜராத் அணிக்கு 2 ரன் அவுட் கிடைத்தது. கடைசி ஓவரில் சிறப்பான பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தும், சிறப்பாக பந்துவீசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளார் மோகித் சர்மா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil