ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் தொடங்கி நடைபெறுகிறது.
இந்நிலையில், மோசமான பார்ம் காரணமாக ரோகித் விலகிய நிலையில் பும்ரா கேப்டனாக களமாடினார். டாஸ் வென்ற அவர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி மீண்டும் சொதப்பி எடுத்தது. ஆஸ்திரேலியாவின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் அடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர். இந்திய அணி 72.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக, ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்தார். பவுலிங்கில் மிரட்டி எடுத்த ஆஸ்திரேலியா அணி தரப்பில், போலண்ட் 4 விக்கெட்டையும், ஸ்டார்க் 3 விக்கெட்டையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டையும், நேதன் லயன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. உஸ்மான் கவாஜா 2 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நாளை வழக்கம் போல் 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
கோலி 100% அவுட்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய விராட் கோலி, முதல் பந்திலேயே கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். போலன்ட் வீசிய பந்து விராட் கோலியின் பேட்டில் உரசி பின்னால் சென்றது. அதனை 2-வது ஸ்லீப் பகுதியில் நின்ற ஸ்டீவ் ஸ்மித், அபாரமாக தனது கையை தரையில் வைத்து பந்தை மேலே கிளப்பி விட்டார். அப்போது அவரது அருகில் இருந்த மார்னஸ் லாபுசாக்னே கேட்ச் எடுத்தார். இதனால் விராட் அவுட் என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால் டிவி ரீப்ளேவில் பார்த்தபோது ஸ்மித் பந்தை தரையோடு வைத்து மேலே எழுப்பி விடுவது போல் தெரிந்தது. பல கோணங்களில் அலசி ஆராய்ந்த பின்னர் மூன்றாவது நடுவர் ஜோயல் வில்சன் விராட் கோலிக்கு நாட் அவுட் கொடுத்தார். இருப்பினும், கோலி 100 சதவீதம் அவுட் என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
இந்தப் போட்டிக்கான இடைவேளையின் போது, முன்னாள் இங்கிலாந்து வீராங்கனையும், வர்ணனையாளருமான இசா குஹா ஸ்மித்திடம், "அந்த பந்தின் அடியில் உங்கள் கை வந்ததா?" என்று கேள்வி எழுப்பினார். அப்போது ஸ்மித், "100%, அதை மறுப்பதற்கில்லை. ஆனால் நடுவர்கள் வேறு முடிவை அறிவித்தனர். அதனால், நாங்கள் அதிலிருந்து நகர்ந்து விட்டோம்," என்று அவர் பதிலளித்தார்.