முக்கொம்பு அணை மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் ஆங்காங்கே முறையான பராமரிப்பு இல்லாததன் காரணமாக பாலங்கள், மதகுகள் போன்றவை உடைந்து மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
காவேரி நதி வெள்ளம்
காவேரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தமிழகம் மற்றும் கர்நாடகாவின் காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் இருக்கும் அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. கபினியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் மூலமாக இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடி நீர் வரை திறந்துவிடப்பட்டதால் கடந்த வாரம், கொள்ளிடம் ஆற்றின் மேல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இரும்புப் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.
கொள்ளிடம் பாலம் பற்றிய செய்தியினைப் படிக்க
இந்நிலையில் திருச்சியில் இருக்கும் முக்கொம்பு அணையின் மதகுகள் 8 வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.
முக்கொம்பு அணை - ஒரு பார்வை
முக்கொம்பு அணை கொள்ளிடம் ஆற்றின் மேல் கட்டப்பட்ட அணையாகும். 630 மீட்டர் நீளம் கொண்டுள்ள இந்த அணையில் சுமார் 45 மதகுகள் உள்ளன. 1836ம் ஆண்டு முக்கொம்பு மேலணை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. 8 மதகுகளும் உடைபட்டத்தால் தற்போது அணையில் இருந்து சுமார் 90,000 கன அடி நீர் வெளியேறி வருகிறது.
ஸ்டாலின் கண்டனம்
திருச்சி - கரூர் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மேலணையை பயன்படுத்தி தான் முக்கொம்பு மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் திருச்சி மற்றும் முசிறிக்கு பயணம் செய்துவருவார்கள்.
இந்நிலையில் அணையின் எட்டு மதகுகள் உடைந்திருப்பதால் அவர்களின் இயல்பு வாழ்வு பெரும் அளவில் பாதிப்பிற்கு உள்ளாகும் என்று பேசியுள்ளார் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின்.
மேலும், அணைகளின் பாதுகாப்பினை தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசு சரியாக உறுதி செய்யவில்லை. அதன் விளைவாகத் தான் கொள்ளிடம் பாலம், முக்கொம்பு அணை என ஒவ்வொன்றாக உடைந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
அணை சீரமைப்பு பணிகளை சீராக மேற்கொண்டிருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வந்திருக்காது என்று கூறிய ஸ்டாலின் இந்த இடர்பாடுகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்திற்கும் அதிமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சீரமைப்புப் பணிகளுக்கு தனி குழு அமைக்க வேண்டும்
முக்கொம்பு அணை மட்டுமன்றி தமிழகத்தில் இருக்கும் அனைத்து அணைகளையும் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை மற்றும் துறைசார் வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றினை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ஸ்டாலின்.
முக்கொம்பு அணை - போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள்
முக்கொம்பு அணை மதகுகள் அனைத்தும் போர்கால அடிப்படையில் சீரமைப்பு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு விடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தற்காலிகமாக பிரச்சனைகளை சமாளிக்க மணல் மூட்டைகள் அங்கு கொட்டப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.