காங்கிரஸ் கட்சியைக் கழட்டிவிட்டு, பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைக்க தி.மு.க துடிப்பதாக அ.தி.மு.க முன்னாள் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் தந்தவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கக் கோரியும், தி.மு.க அரசுக்கு எதிராகவும், அ.தி.மு.க சார்பில் கடலூரில் நேற்று (டிசம்பர் 17) ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை எம்.பி-யும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.
இதையும் படியுங்கள்: அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி உடைகிறதா? சி.வி சண்முகம் பேச்சும் அண்ணாமலை பதிலடியும்!
அப்போது, “பிற மாநிலங்களில் நிலங்களைக் கையகப்படுத்திய மத்திய அரசு உரிய இழப்பீடு கொடுத்துவிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் இழப்பீடு கொடுக்காமல் வஞ்சிக்கிறது. மத்திய பா.ஜ.க அரசு சொல்லும் அத்தனை வேலைகளையும் தி.மு.க தலையில் தூக்கி வைத்துச் செய்து கொடுக்கிறது. என்.எல்.சி விவகாரத்திலும் கூட அதே தான் நடந்துள்ளது. அவர்கள் டெல்லிக்குப் போனால், அப்படியே மாறிவிடுகிறார்கள். மத்திய அரசிடம் கெஞ்சுகிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் தி.மு.க கூட்டணி வைக்கப் போகிறது. ஒன்று எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள். இல்லை என்றால் காங்கிரஸை விட்டு விலகுங்கள் என்பதே பா.ஜ.க.,வின் நிபந்தனையாக உள்ளது” என்று சி.வி.சண்முகம் பேசினார்.
இதற்கு பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி சண்முகம் உண்மையைத் தான் பேசியுள்ளார் என கூறியுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டுவிட்டு, பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைக்க தி.மு.க துடியாய் துடிக்கிறது. இதைத் தான் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். தி.மு.க சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது எனக் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil