எந்த மதத்தையும் திணிக்க மாட்டோம். அவரவர் மதத்தையும் பாரம்பரியத்தையும் பின்பற்றுவதே மதச்சார்பின்மை என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் இன்று பா.ஜ.க. சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதையும் படியுங்கள்: உதயநிதி துணை முதல்வர் ஆனாலும் வரவேற்போம் – துரை வைகோ
அப்போது அவர் பேசியதாவது, "சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை முதல் முறையாக பா.ஜ.க. நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பா.ஜ.க அனைத்து மதங்களைச் சேர்ந்த சான்றோர்களையும், பெரியோர்களையும் ஒரே மேடையில் இணைத்துள்ளது.
அவரவர் மதத்தையும் பாரம்பரியத்தையும் பின்பற்றுவதே மதச்சார்பின்மை. அவசரநிலை காலத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தையை புதிதாகக் கொண்டு வந்தனர். எந்த மதத்தையும் யார் மீதும் திணிக்க மாட்டோம்.
பா.ஜ.க. கட்சியில் எல்லா மதத்திலும் இருந்தும் தலைவர்கள் வருவார்கள். இது ஒரு மதத்திற்கு சொந்தமான கட்சி இல்லை. அது மக்களுக்கு புரிவதற்கு சற்று காலம் ஆகும். அதுவரை கட்சி கடுமையாக வேலை செய்ய வேண்டும்.
இந்தியாவில் ஒரு மாநிலத்தில் சிறுபான்மையாக இருப்பவர்கள், இன்னொரு மாநிலத்தில் பெரும்பான்மையாக இருப்பார்கள். எனவே சிறுபான்மை, பெரும்பான்மை என்பதை தாண்டி இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். போலி அரசியலை உடைக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் உரையாற்றினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil