தமிழகம் வந்த பிரதமர் மோடியுடன் அ.தி.மு.க தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசியதில் அரசியல் இல்லை என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்ள வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி தமிழகம் வந்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை வரவேற்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தனித்தனியாக நின்று வரவேற்றனர்.
இதையும் படியுங்கள்: 10% இட ஒதுக்கீடு: தமிழக காங்கிரஸ், சட்டமன்ற காங்கிரஸ் மாறுபட்ட நிலைப்பாடு?
தமிழகத்தில் மருத்துவகல்வியை தேவையானவர்களுக்கு தமிழ் வழியில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். பொறியியல் படிப்புகளில் தமிழ் மொழியில் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனை அதிகரிக்கை மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மக்கள் மீது பிரதமருக்கு மட்டற்ற பாசம் உள்ளது. நேற்று திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் வழியில், பிரதமர் காரில் பயணித்து, அவருடன் ஒரு மணி நேரம் பேச வாய்ப்பு கிடைத்தது. தமிழகம் குறித்து பல்வேறு தகவல்களை அவர் கேட்டறிந்தார். ஆனால் 2024 தேர்தல் அல்லது கூட்டணி பற்றி பேசவில்லை.
தி.மு.க.,வுக்கும் பா.ஜ.க.,வுக்கும் களத்தில் நேரடி போட்டி நிலவுகிறது. சித்தாந்த ரீதியாக தி.மு.க எங்களுக்கு எதிரி. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையில் காங்கிரஸ் மத்தியிலும் மாநிலத்திலும், வேறு வேறு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இதேபோல் 10% இடஓதுக்கீட்டிலும் மாறுப்பட்ட நிலைப்பாட்டில் காங்கிரஸ் உள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியை தி.மு.க பி - டீம் ஆக அறிவித்துவிடலாம். தி.மு.க மட்டுமே 10% இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது.
இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவரும் பிரதமரைச் சந்திக்க விரும்பினார்கள், அதன்பேரில் பிரதமர் அவர்களை சந்தித்து உள்ளார். இதில் எந்த அரசியலும் இல்லை. நாங்கள் அ.தி.மு.க கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம். தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் அ.தி.மு.க.,வுடன் நாங்கள் கூட்டணியை தொடர்வோம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil