சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மரியாதை செலுத்த வந்தபோது, விடுதலை சிறுத்தை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று (டிசம்பர் 6) நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அவரது திருவுருவச் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: தமிழகத்தில் இதுவரை 65.80 லட்சம் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு- செந்தில் பாலாஜி
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரான டி.குருமூர்த்தி கும்பகோணம் முழுவதும் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் அம்பேத்கர் படத்தில் காவி உடை அணிவித்து, விபூதி பூசியும், குங்குமம் வைத்தும் கும்பகோணம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது.
இதனை அறிந்த ஒரு கட்சியினர் உடனடியாக போஸ்டர்களை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து போஸ்டர்கள் அகற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து கும்பகோணத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குரு மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
இது ஒருபுறம் இருக்க அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி அர்ஜூன் சம்பத் தாக்கல் செய்த சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவிக்கமாட்டேன், விபூதி, குங்குமம் பூசமாட்டேன் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அர்ஜுன் சம்பத் உத்தரவாதம் அளித்தார். இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உத்தரவாத கடிதம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில், எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்ப மாட்டோம், போக்குவரத்துக்கோ அல்லது பொது மக்களுக்கோ இடையூறு ஏற்படுத்த மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.
மேலும், அம்பேத்கரின் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மாட்டேன் என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அம்பேத்கர் மணி மண்டபத்தில் அர்ஜுன் சம்பத் அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இந்த நிலையில், சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வந்தார். அப்போது அங்கு கூடிய இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அர்ஜூன் சம்பத்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்தனர். இதனால் அம்பேத்கர் மணி மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil