Bank Strike : பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்குதல், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தன. இந்த கோரிக்கைகளின் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இதுதொடர்பாக வேலைநிறுத்தம் போராட்டத்தையும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.
இதையடுத்து மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையரிடம், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கடந்த 27-ந்தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. ஆகவே 31-ம் தேதி (இன்றும்), 1-ம்தேதி (நாளையும்) வங்கிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.
இருப்பினும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் நேற்று மும்பையில் வங்கி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டப்படி இன்றும் நாளையும் வங்கிகள் வேலை நிறுத்தம் என்பதை திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் சி.எச்.வெங்கடாச்சலம், “30 மாதமாக நிலுவையில் இருக்கும் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை முறையாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நல ஆணையர், வங்கி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் 60 ஆயிரம் பேரும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் 31 மற்றும் 1-ந்தேதி ஆகிய 2 நாட்கள் இயல்பான வங்கி சேவை பாதிக்கப்படும்.
சென்னையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதேபோல அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.