மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்ய ஒரு மாதத்திற்குள் 76 மத்திய அமைச்சர்களும் தமிழ்நாட்டிற்கு வருவார்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்: நீட் தேர்வு விலக்கு கிடைக்குமா? 2024 மக்களவை தேர்தல் இலக்கு என்ன? – மு.க.ஸ்டாலின் பதில்கள்
விழாவில் பேசிய அண்ணாமலை, இப்போது பலரும் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு அதிகம் வருவதற்கான காரணம் என்ன என்று கேட்கிறார்கள். மத்திய அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களையும் ஒரு மாதத்திற்குள் தமிழ்நாட்டிற்கு சென்று மத்திய அரசு பயனாளிகளை சந்தித்து, மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றுள்ளதா என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதை கண்காணிக்க 76 அமைச்சர்களும் ஒரு மாதத்திற்குள் தமிழகம் வருவார்கள். இதுவரை 19 அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இன்னும் 50 அமைச்சர்கள் வரவுள்ளனர். மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகளை சந்திக்க உள்ளனர். மேலும், மத்திய அரசு கொடுக்கும் பணத்தை சரியாக செலவு செய்கிறார்களா என ஆய்வு மேற்கொள்ளவும் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாடு வரவுள்ளனர்.
மேலும், மத்திய அரசின் விபத்து காப்பீடு, மத்திய அரசின் ஆயுள் காப்பீடு, மத்திய அரசு மருத்துவ காப்பீடு, தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம், செல்வ மகள் சேமிப்பு திட்டம் E-shram என்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல திட்ட அட்டை வழங்குவது என 7 திட்டங்களுக்கான தொடக்க விழா இன்று தொடங்கப்பட்டுள்ளது.
அரசுத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில், மாதத்திற்கு ரூ. 42 செலுத்தினால் 60 ஆண்டுகளுக்கு பிறகு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செல்வ மகள் சேமிப்பு திட்டம் முதலில் பெண்களுக்கு மட்டும் இருந்தது. தற்போது ஆண்களுக்கான பொன் மகன் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil