Brother pedaling bicycle 80 KM to bring his sister home in Madurai
Brother pedaling bicycle 80 KM to bring his sister home in Madurai : மதுரை கூடல் நகரை சேர்ந்தவர் ஜீவராஜ். இவருடைய தங்கை பிரவீனா தேனியில் இருக்கும் பிரபல கண் மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறார். இவருடைய தாயார் தமிழ்ச்செல்வி. மிகவும் சிறுவயதிலேயே கணவனை இழந்த தமிழ்ச்செல்வி தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் மிகவும் நன்றாக படிக்க வைத்துள்ளார்.
Advertisment
திடீரென தமிழ்ச்செல்விக்கு உடல் நல குறைவு ஏற்பட, தன்னுடைய மகளை பார்க்க வேண்டும் என்று மகனிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். தன்னிடம் இருசக்கர வாகனம் ஏதும் இல்லாத நிலையில், பழைய சைக்கிள் ஒன்றையும், அதில் காற்றடிக்கும் பம்ப் ஒன்றையும் வைத்துக் கொண்டு தேனிக்கு பயணமானார்.
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை காற்றடித்த வண்ணம், பயணமான அண்ணன் ஒரு வழியாக இரவு தேனி அரவிந்த் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். நேற்றிரவு மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் நிழற்குடையில் படுத்து உறங்கியவர் இன்று காலை தன்னுடைய தங்கையை அழைத்துக் கொண்டு செல்ல விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் மாவட்ட நிர்வாக அனுமதி இல்லாமல் வேறு மாவட்டத்திற்கு அனுப்ப முடியாது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. தன்னுடைய தாயின் நிலையை விளக்கி கூறியதும் பிரவீனாவை அனுப்பி வைத்தனர். ஆனால் பிறகு அவர்கள் இருவரும் சைக்கிளில் செல்வதை கவனித்த தேனி காவல்துறையினர் அவர்களை விசாரணை செய்துள்ளனர்.
வீட்டில் இருக்கும் நிலைமையை விளக்கி கூறியதும் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் , தேனியில் உள்ள பிரபல துணிக்கடை உரிமையாளர் சக்தியிடம் உதவி கேட்டுள்ளனர். அவரோ, தனது காரை கொடுத்து அனுப்பியுள்ளார். அந்த காரில் இருவரையும், மதுரைக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர் தேனி காவல்துறையினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“