சென்னை ஐ.ஐ.டி தமிழகத்தில் இருந்து 3000 பேரை அயோத்தி மற்றும் காசிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை அறிவித்துள்ளது. இதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் இருந்து 3,000 சிறப்பு விருந்தினர்களை அயோத்தி மற்றும் காசிக்கு அழைத்துச் சென்று காண்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: சூரிய கிரகணம் – மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்படுவதாக நிர்வாகம் அறிவிப்பு
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தேசிய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.,யும், பனாரஸ் ஹிந்து பல்கலையும் இணைந்து, காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே உள்ள கல்வி, பொருளாதார, சமூக, கலாசார உறவுகளை வெளிக்கொணர இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
அடுத்த மாதம், (நவம்பர்) 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 வரை, தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், தமிழகத்தின் 12 இடங்களில் இருந்து கலை, இலக்கியம், ஆன்மீகம், கல்வி உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்களை காசிக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்து ரயில்களில் சிறப்பு பெட்டி அமைக்கப்பட்டு, காசிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். ஒவ்வொரு குழுவினரும் புறப்பட்டு திரும்பி வர, எட்டு நாட்களாகும். 12 வெவ்வேறு நாட்களில் இந்த பயண ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
இந்த பயணத்தில் விருந்தினர்கள் காசி, அயோத்தி உள்ளிட்ட இடங்களை பார்வையிடுவர். கங்கையில் படகு சவாரியும் உண்டு. பயண செலவு, தங்குமிடம் முழுவதும் இலவசம். விருப்பம் உள்ளவர்கள், https://kashitamil.iitm.ac.in/ என்ற இணையதளத்தில், உடனடியாக தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil