தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தொடங்கி பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் தினமும் மழை பெய்து வருகிறது. அதுவும் கடந்த சில நாட்களாக சில பகுதிகள் கனமழையும் பெய்து வருகிறது.
இதையும் படியுங்கள்: தமிழகத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
இந்தநிலையில் வெள்ளி (நவம்பர் 11) மற்றும் சனிக்கிழமைகளில் (நவம்பர் 12) தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும், சனிக்கிழமை நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னையில் இன்று மாலை முதலே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதேபோல், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனையடுத்து, வெள்ளிக்கிழமை சென்னை, வேலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து, உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
கனமழை காரணமாக டெல்டாவில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.