திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்த நிலையில், போலீசார் விஜயலட்சுமியிடம் இன்று விசாரணை நடத்தினர்.
இதையும் படியுங்கள்: ஜெனீவாவில் இருந்து சீமானுக்கு வந்த நகைகள்: ஐ.டி ரெய்டு நடத்த வேண்டும்; நடிகை விஜயலட்சுமி பகீர்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதில், ஈழத் தமிழரான என்னை திருமணம் செய்துகொள்வதாக சீமான் வாக்குறுதி அளித்தார். மதுரையில் திருமணம் செய்துகொண்டு வேளச்சேரி வீட்டில் கணவன் - மனைவி போல ஒன்றாக வாழ்ந்தோம். திருமணமானது இப்போது வெளியில் தெரிய வேண்டாம், பிரபாகரன் தலைமையில் ஊரறிய திருமணம் செய்துகொள்ளலாம் என நம்பிக்கை அளித்தார். ஏழு முறை எனக்கு கருக்கலைப்பும் நடந்தது. என்னிடம் இருந்து ரூ.60 லட்சம் பணம் மற்றும் 35 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறித்துக்கொண்டு கயல்விழியை திருமணம் செய்துகொண்டார். என் வாழ்வை சீரழித்த சீமானை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தை அமைதியாக கடந்து போக விரும்புவதாக கூறி, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார் சீமான். இருப்பினும் சீமான் மீது விஜயலட்சுமி தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.
இந்தநிலையில், விஜயலட்சுமி புகார் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதலாவதாக சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கௌதம் ஆகியோர், நடந்த விவரங்கள் குறித்தும், புகாரின் உண்மைத்தன்மை குறித்தும் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது விஜயலட்சுமி பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“