மாணவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், 10-ம் வகுப்பு தேர்வுகளை தள்ளி வைக்கக் கோரிய வழக்கு, வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, அதனை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் படத்தை இயக்கியவர்: முதல் படமே வெளியாகாத நிலையில் இளம் இயக்குநர் மரணம்
கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஜூன் 1-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதை எதிர்த்து, சென்னை சூளைமேட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று அதிகமாகி வருவதாகவும், 200 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு படிக்க வரும் பெரும்பாலான மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், தேர்வின் போது மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவார்களா என்பது கேள்விக் குறி எனவும், எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாட்டையும் செய்யாமல் தேர்வை அறிவித்திருப்பது மாணவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும் எனவும் மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார்.
சி.பி.எஸ்.சி தேர்வுகள் ஜூலையில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரும்வரை 10-ம் வகுப்பு தேர்வை நடத்த கூடாது… தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ஸ்டாலின் ராஜா, நாளுக்கு நாள் கொரொனா பாதிப்பு அதிகரிக்கிறது. அதை அரசு கருத்தில் கொள்ளாமல் பொது தேர்வுகளை அறிவித்துள்ளது. பெற்றோர், குழந்தைகளை அனுப்ப பயப்படுகின்றனர். பள்ளி குழந்தைகள் எந்த அளவிற்கு சமூக இடைவெளியை பின்பற்றவர் என்பது தெரியவில்லை. அதனால், சி.பி.எஸ்.இ போல தேர்வை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைக்கலாம் என்று வாதிட்டார்.
மேலும் அவர், ஜூன் மாதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், பல மாநிலங்கள், தேர்வுகளை ரத்து செய்துள்ளன. சில மாநிலங்களில் தேர்வுகள் ஜூலைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன என்பதால், அதையே தமிழக அரசும் பின்பற்ற உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
டாஸ்மாக் வழக்கில் ஐகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை – தமிழகத்தில் மீண்டும் திறக்க வாய்ப்பு
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் , கல்வியாண்டு ஏற்கனவே தள்ளி போய்விட்டது. பெற்றோர் ஆசிரியர் சங்கமோ, அரசு ஆசிரியர் சங்கமோ நீதிமன்றத்தை நாடவில்லை. மாணவர் அல்லது பள்ளி தரப்பில் யாரும் வழக்கு தொடரவில்லை. அரசு உத்தரவால் பாதிக்கப்படாத வழக்கறிஞர் தொடர்ந்த பொது நல வழக்கை எப்படி அனுமதிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என, மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”