தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவினால் வாக்குகள் எண்ணப்படவில்லை. இதற்கிடையில், நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத் துறை உதவி ஐஜி கீதாவை சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தேர்தலில் தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கவில்லை, வாக்களர் பட்டியலில் குளறுபடி நடைபெற்றுள்ளது. பலர் பெயர்கள் நீக்கபட்டுள்ளது என்பதால் நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக்கோரி ஏழுமலை, பெஞ்சமின் உள்ளிட்டோரும், தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்யகோரி நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி கல்யாணசுந்தரம், கடந்த மாதம் 24 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில்,தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு அதன் உறுப்பினர்கள் மூலம் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தின் படி தேர்தல் நடத்த வெளியிட்ட அறிவிப்பு தவறானது அதன் படி தேர்தல் அதிகாரி நியமித்து கடந்த ஆண்டு (2019) ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் நடிகர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல் தாஸை தேர்தல் ஆதிகாரியாக நியமிப்பதாகவும், தேர்தல் அதிகாரி புதிய வாக்காளர் பட்டியலை தயாரித்து மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். மேலும், மீண்டும் தேர்தல் நடைபெற்று முடியும் வரை சங்க நிர்வாகத்தை தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்த
அதிகாரி கீதா தொடர்ந்த கவனிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. அந்த மனுவில் தமிழகத்தில் பல்வேறு சங்கங்கள் பதவிக்காலம் முடிந்த பின்பும் பழைய நிர்வாகிகள் அந்த சங்கங்களை நிர்வகித்து வருவதாகவும், இதற்கு முன்னர், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பலமுறை தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவி காலம் முடிந்தும் சங்கத்தை நிர்வகித்து வந்ததாகவும் அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடிகர் சங்க பிரச்சனையில், தமிழக அரசு ஒரு சார்பாக நடந்து கொண்டதாகவும் நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்றும் அவர் அந்த மனுவில் குறை கூறியுள்ளார். தேர்தலை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்த தனி நீதிபதி எந்த ஒரு சட்ட ரீதியான அம்சத்தையும் ஆராயாமல் இந்த தேர்தலை ரத்து செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து எண்ணப்படாமல் உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நாளை மறுதினம் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.