Tik Tok Murder : டிக்டாக்கில் ஏற்பட்ட மோதலால் கடலூரில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Advertisment
கடலூர் மாவட்டம் முதுநகர் சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் பெஞ்சமின் - பிரதீபா தம்பதியின் 18 வயதான மகன் ஜெய்வின் ஜோசப். கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய ஜெய்வின், நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, நண்பர்களுடன் சேர்ந்து டிக் டாக்கில் வித விதமாக வீடியோ பதிவிடுவது என்று படு ஜாலியாக இருந்து வந்துள்ளார்.
இப்படி வாழ்க்கையை என்ஜாய் செய்துக் கொண்டிருந்த ஜெய்வின் 4-ம் தேதிக்குப் பிறகு வீடு திரும்பவில்லை. அவரின் பெற்றோர் எங்கு தேடியும் அரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து தனது மகனை கண்டுபிடித்து தருமாறு ஜோசப்பின் தாய் பிரதீபா கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.
Advertisment
Advertisements
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து ஜெய்வினை தேடி வந்தனர். தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக, அவரின் செல்போனை ஆய்வு செய்த போலீசார், ஜெய்வின் கடைசியாக யார் யாரிடமெல்லாம் பேசினார் என்ற தகவலையும் சேகரித்தனர்.
அந்தத் தகவலை வைத்துப் பார்த்த போலீஸாருக்கு ஜெய்வினின் நண்பர்கள் 7 பேர் மீது சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் முது நகர் பகுதியை சேர்ந்த 21 வயதான விஜய் மற்றும் காரைக்காடு பகுதியை சேர்ந்த 27 வயதான பிரபு என்ற பிரபாகரன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணை ஜெய்வின் பற்றிய மர்ம முடிச்சை அவிழ்த்தது. ஜெய்வினுக்கும் அவரது நண்பர்களுக்கும் மோகன் சிங் தெருவை சேர்ந்த பெண் ஒருவருடன் பேசுவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பிரச்னை ’கேங் வாராக’ மாறியுள்ளது. ஒற்றுமையாக இருந்த நண்பர்கள், இருதரப்பாக பிரிந்து அந்த பெண்ணிற்காக சண்டை போட்டு வந்துள்ளனர்.
இந்த மோதலை ஜெய்வின் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை விளையாட்டாக டிக் டாக்கில் பதிவேற்றியதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ஜெய்வினின் நண்பர்களான, விஜய் மற்றும் காரை காடு பகுதியை சேர்ந்த பிரபாகரன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. வீடியோவை நீக்குமாறு ஜெய்வினிடம் கூறியுள்ளனர். அவர் நீக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் ஜெய்வினை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக காரைக்காடு உப்பனாற்றுப் பகுதிக்கு மது அருந்தலாம் எனக்கூறி ஜெய்வினை நண்பர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு நண்பர்கள் அனைவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
பின்னர் ஜெய்வினுக்கு மது போதை தலைக்கேறியதும் திட்டமிட்டபடி நண்பர்கள் இணைந்து அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை உப்பனாற்றுப்பதியில் குழிதோண்டி புதைத்து விட்டு தலைமறைவானது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜோசப் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், தலைமறைவாக இருந்த ஜெய்வினின் நண்பர்கள் 5 பேரை தேடி வந்தனர். பின்னர் கடலூர் அருகே தலைமறைவாக இருந்த அந்த 5 பேரையும் டிஎஸ்பி சாந்தி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். டிக் டாக் வீடியோவால் இளைஞர் கொலையான சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"