தி.மு.க முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும், பலராலும் எம்.டி என செல்லமாக அழைக்கப்பட்டவருமான பிரபல தொழிலதிபர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி திருச்சி தில்லைநகரில் நடைபயிற்சி சென்றபோது கடத்தி செல்லப்பட்டு திருவளர்ச்சோலை பகுதியில் படுகொலை செய்யப்பட்டார்.
அ.தி.மு.க ஆட்சியின்போது படுகொலை செய்யப்பட்டவரின் வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனிப்படை, சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ என பல்வேறு கட்டங்களை கடந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் வழக்கு நிலுவையிலேயே இருந்தது.
தற்பொழுது தி.மு.க ஆட்சியில் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதிய லாரி.. அதிகாலையில் பரபரப்பு
ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு தனிப்படை எஸ்.பி ஜெயக்குமார், டி.எஸ்.பி மதன், இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர் வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும், ராமஜெயம் கொலை தொடர்பாக சிறையில் உள்ள கைதிகள், குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சிறைக்கு வெளியில் உள்ளவர்கள், ராமஜெயம் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து அந்த சமயத்தில் செல்போனில் பேசியவர்கள் என 1400க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இவ்வழக்கில் 20 பேர் அடங்கிய இறுதிபட்டியல் தயார் செய்யப்பட்டநிலையில், இந்த வழக்கின் முக்கிய விசாரணைகளின் நகர்வு குறித்து அறிவதற்கும், அதேநேரம் தமிழகத்தையே அச்சுறுத்திய பிரபல ரவுடிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோரை கஸ்டடியெடுத்து கடந்த சில நாட்களாக தீவிரமாக விசாரித்து வருவது குறித்தும், சில ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டு இருப்பது குறித்தும் ஆராய சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி ஷகில் அக்தர் விமான மூலம் திருச்சி வந்தடைந்தார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் காவல்துறையினருடன் ஷகில் அக்தர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசுகையில்; தமிழகத்தில் உள்ள மிக முக்கிய பிரபல ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையில் உள்ள தகவல்களை உங்களிடம் பகிர முடியாது என்று கூறினார்.
பின்னர், ராமஜெயம் கொலை நடந்து சுமார் 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. சி.பி.ஐ இடம் சென்று வந்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு, ஆறு மாதத்தில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் முன்னேற்றம் உள்ளதாக டி.ஜி.பி குறிப்பிட்டார்.
மேலும், ரவுடிகளிடம் விசாரணை நடத்துவதால் இந்த கொலை வழக்கில் புதிய குழு உண்மையை கண்டுபிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறப்பு புலனாய் குழுவிற்கு அனைத்து உதவிகளும் கிடைக்கிறது, என்றும் அவர் கூறினார்.
அடுத்து, நீங்கள் ரவுடிகளிடம் விசாரணை நடத்த திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம் ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார்.
அதேநேரம் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என் நேருவிடம் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக டி.ஜி.பி விசாரணை இன்று நடக்கிறதே என்றபோது ”போலீஸ் விசாரணையில் உள்ளது. அதை பற்றி கருத்து தெரிவிக்க முடியாது” என்று பதிலளித்தார்.
ஏற்கனவே நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் ராமஜெயத்தின் உதவியாளர்களாக வேலை பார்த்த மோகன், நந்தகுமார் ஆகியோருக்கு சி.பி.ஐ உதவியுடன் சென்னையில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை 20 பேர் என்பதால் அவர்களிடம் சோதனைக்குப் பிறகே இந்த வழக்கில் வேறு எந்த திருப்பமும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது தெரிய வரும்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil